அறிவுமதியின் காதல்பேசி – லிங்குசாமி சசி மிரட்சி
பாவலர் அறிவுமதி பல்லாண்டுகளாக கல்லூரி மாணவ மாணவியரிடம் உரையாற்றும் போது தற்கால காதல் குறித்து ஒரு பாடலைப் பாடுவார்.
அப்பாடலுக்கு இசைவடிவ்ம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். தீபக் ப்ளு, நின்சி வின்செண்ட் ஆகியோர் குரல்களில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது.
இப்பாடலின் முன்னோட்டத்தை இயக்குநர் லிங்குசாமி வெளியிட இயக்குநர் சசி பெற்றுக்கொண்டார்.
அப்பாடல் குறித்து இயக்குநர் சசி கூறியிருப்பதாவது….
காரில் வீட்டுக்குப் போய்க்கொண்டிருப்போம்,வீடு வந்திருக்கும், வீட்டில் நூறு வேலைகள் காத்திருக்கும் அவற்றில் உடனடியாகச் செய்தாக வேண்டிய அவசர வேலைகளும் இருக்கும். அப்படியிருந்தும் சில பாடல்களைக் கேட்கும் போது காரை விட்டு இறங்காமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்போம்,சிலரது பாடல்கள் அப்படி இருக்கும். அப்படிப்பட்டவர் அறிவுமதி. அவருடைய பாடல்களில் அடுத்து என்ன வரி போடுவார் என்கிற எதிர்பார்ப்பு அவ்வளவு சுகமாக இருக்கும்.இந்தப்பாடலிலும் அப்படிப்பட்ட வரிகள் இருக்கின்றன. அவை அனைத்தும் அவ்வளவு இளமையாக இருக்கின்ற்ன. 2கே கிட்ஸ் என்று சொல்வார்களே அவர்களுடைய மனசை சொல்கிற மாதிரி இருக்கு. கைபேசி கைகாரி, குறுந்தகவல் கொலைகாரிங்கிறார். அய்யய்யோ நான் மிரண்டுவிட்டேன்.ரொம்ப நல்லா எழுதியிருக்கார் ரொம்ப இளமையா எழுதியிருக்கார்.ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு மெலடி கேட்கிறேன் அவ்வளவு சாஃப்டா இருக்கு திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.இந்தப்பாடல் கண்டிப்பா எல்லோருடைய இதயத்தையும் ஆளப்போகுது.
இவ்வாறு சசி புகழ்ந்திருக்கிறார்.
இயக்குநர் லிங்குசாமி இப்பாடல் குறித்துக் கூறியிருப்பதாவது….
என்னுடைய பையா படம் வெளியான நேரத்தில் அறிவுமதி அண்ணன் இந்தப்பாடலைப் பாடிக்காட்டினார்.அப்போதே அவரிடம், அண்ணே இந்தப்பாட்டை யாரிடமும் கொடுக்காதீங்க, நம்ம படத்துல் பயன்படுத்தலாம் என்று சொன்னேன்.எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.இன்னைக்கு,இன்றைய சூழலுக்கு இந்தப்பாட்டு அவ்வளவு பொருத்தமா இருக்கு.அந்த வரிகள் கெடாமல் அற்புதமாக இசையமைத்திருக்கிறார் தாஜ்நூர்.இப்பாடலில் ஒரு வரி இருக்கும், காதலனுடைய கைபேசியை காதலியும் காதலியுடைய கைபேசியை காதலனும் மாத்திகிட்டா என்ன நடக்கும்னு ஒரு வரி இருக்கு.அந்த ஒருவரியே ஒரு படம் மாதிரி எனக்குத் தெரிஞ்சது.அதுமாதிரி அழகான வரிகளும் அற்புதமான வரிகளும் நெறஞ்சிருக்கு.இது இந்தக்காலத்துக்கான பாட்டு, சமீபத்துல இந்த மாதிரி அற்புதமான ஒரு மெலடி பாடல் நான் கேட்கல,இது மிகப்பெரிய வெற்றி பெறும். அண்ணனுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் நெகிழ்ந்திருக்கிறார்.
முழுப்பாடல் சில நாட்களில் வெளியாகும் என்றும் அது காணொலியாகவும் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
பாடல் முன்னோட்டம் காண….











