சினிமா செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்புக்குத் திடீர்தடை – ரஜினி அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.இதனால் 2020
தீபாவளி வெளியீடு என்பதும் தள்ளிப்போனது.

அதன்பின் மே 12 அன்று, இப்படம் 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் திரைப்படப்படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதைத் தொடர்ந்து பல படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவது தொடர்பாக ரஜினியிடம் கேட்டபோது அவரும் சம்மதித்தாராம்.இதனால் உற்சாகமான படக்குழு படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வந்தது.

ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடுகிறார்கள்.அக்டோபர் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும்.

அக்டோபர் 8 ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது திடீரென அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம், அண்ணாத்த படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தச் சொல்லிவிட்டதாம்.

ரஜினியே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்ட போதும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அண்ணாத்த படப்பிடிப்பை இப்போது தொடங்கவேண்டாம் என்று சன் பிக்சர்ஸ் திடீரென முடிவெடுத்துள்ளது என்கிறார்கள்.

இதனால் உற்சாகமாகப் படப்பிடிப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். ரஜினியும் இவ்விசயம் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளாராம். அதேநேரம் சன்பிக்சர்ஸ் ஒரு முடிவெடுத்தால் சரியாகத்தான் இருக்கும் என்றும் சொல்லி அமைதியாகிவிட்டாராம்.

Related Posts