தயாரிப்பாளர் சங்கம் திடீர்முடிவு – அஜீத் படத்துக்கு இலாபமா? நட்டமா?
ஜூலை 29 அன்று, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் பகுதி விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து பங்குபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சேலம் பகுதியில் திரைப்படங்கள் வெளியிடும் போது ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது,
ஆலோசனையின் முடிவில் இரு அமைப்புகளும் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள்…..
தீர்மானம் 1
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ், விக்ரம், மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சேலம் பகுதியில் 45 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
அதன் விவரம்
சேலம் டவுன் – 7 திரையரங்குகள்,ஓசூர் – 2 திரையரங்குகள்
தர்மபுரி – 2 திரையரங்குகள்,கிருஷ்ணகிரி – 2 திரையரங்குகள்
நாமக்கல் – 2 திரையரங்குகள்,குமாரபாளையம் – 2 திரையரங்குகள்
திருச்செங்கோடு – 2 திரையரங்குகள்
மற்ற அனைத்து ஊர்களிலும் தலா ஒரு திரையரங்கில் மட்டுமே திரையிடவேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2
மற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3
சேலம் பகுதியில் வியாபாரமாகாத, வெளியிட இயலாத சிறு முதலீட்டுத் திரைப்படங்களைத் தயாரிப்பாளர்களின் நலன் கருதி சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் கவுன்சிலே பொறுப்பேற்று 3% சர்வீஸ் சார்ஜ் மட்டுமே பெற்றுக்கொண்டு ரிலீஸ் செய்து தருவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி 29/07/2019 முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் தீர்மானங்களை தயாரிப்பாளர்கள் சங்கமும் சேலம் விநியோகஸ்தர்கள் சங்கமும் ஒருங்கிணைந்து எடுத்திருக்கின்றன. எனவே இதை திரையரங்கு உரிமையாளர்கள் கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும்.
இம்முடிவால் உடனடியாக அஜீத்தின் நேர் கொண்ட பார்வை படம் பாதிப்புக்கு உள்ளாகும் என்கிறார்கள்.
இம்முடிவு எடுக்கப்படாதிருந்தால் சேலம் பகுதியில் அஜீத் படம் சுமார் நூறு திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்போது அது பாதிக்கும் கீழே குறைந்து 45 அரங்குகளில் மட்டுமே வெளியாகவிருக்கிறது.
இதனால் சுமார் 55 திரையரங்குகளிலிருந்து கிடைக்கக் கூடிய முன்பணம் மற்றும் அந்த அரங்குகளில் தொடக்க நாட்களில் கிடைக்கக் கூடிய வசூல் ஆகியன நட்டம். இது பெரிய தொகையாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இன்னொரு பக்கம் 100 அரங்குகளில் மூன்று நாட்கள் கூட்டம் இருக்கலாம் அதன்பின் எல்லாமே காலியாக இருக்கும் இதுவே 45 அரங்குகளில் மட்டும் வெளியிட்டால் பத்து நாட்களுக்கும் மேல் கூட்டம் இருக்கும். அதோடு கியூப் கட்டணம் உள்ளிட்ட சில செலவுகள் பாதியாகக் குறையும் இதனால்; தயாரிப்பாளர்களுக்குத்தான் இலாபம் என்றும் சொல்கிறார்கள்.
எது சரி? என்பது அஜீத் படம் வெளியாகி வசூல் கணக்கு போட்டுப் பார்த்த பின்புதான் தெரியவரும்.











