சினிமா செய்திகள்

சங்கம் எதற்கு? விதிமுறை எதற்கு? விஜய் ஆண்டனிக்கு எதிராக கொந்தளித்த நகுல்

ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய்.

இந்தப் படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநராம்.

‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நவம்பர் 10 அன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

அதில், படத்தின் நாயகன் நக்குல், நாயகி அன்ஷால் முன்ஜால், படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, தயாரிப்பாளர் மன்னு, நடிகர் ப்ளாரன் பெரைரா, நடிகை அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது படத்தின் நாயகன் நக்குல் பேசுகையில்,

இந்தப் படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களுக்கு அனுமதிக் கடிதம் கொடுத்தது.

நாங்கள் இந்தப் படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தோம்.

அதை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கிடைத்தது. அதில் ‘செய் ’திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும். ஆனால் 150 ஸ்கீரின்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ஸ்கிரீன்களில் தான் வெளியாகும் என்றிருந்தது.

இதையறிந்ததும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் படத்தை மார்ச் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்தோம்.

அப்போது திரைத்துறையில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால் நாங்கள் சரியான தேதிக்காகக் காத்திருந்தோம்.

அதன் பிறகு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒழுங்குமுறை குழுவின் அனுமதிக்காகக் காத்திருந்தோம்.

நாங்கள் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது என்றும் தீர்மானித்தோம். அதன் பிறகு நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி, நவம்பர் 16 ஆம் தேதி ‘செய்’ படம் வெளியாகும் என்றும், தமிழகத்தில் 150 ஸ்கிரீனில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்கள்.

நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தோம். ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். அதற்காக யாருடைய மனதும் புண்படுத்தவேண்டாம் என்று காத்திருந்து, நவம்பர் 16 ஆம் தேதியை ஒப்புக்கொண்டோம்.

ஆனால் இன்று எதிர்பாராத வகையில் நவம்பர் 16 ஆம் தேதியன்று படம் வெளியாகும். ஆனால் எங்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 150 சென்டர்களில் படம் வெளியாகாது என்றும், அந்தத் தேதியில் விஜய் ஆண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன் ‘என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம்.

திட்டமிட்டப்படி, செய் 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம்.

எங்களுடைய படத்திற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து வெளியீட்டிற்கான அனுமதிக் கடிதம் அளித்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு இதுவரை வழங்கவில்லை என்று கேள்விப்படுகிறோம்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அவர்கள் எங்களுடைய படத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்.

எங்களுடைய படமான ‘செய் ’படத்தை திட்டமிட்டபடி வெளியிட உதவுங்கள் என்று திரையுலகில் உள்ள அனைவரிடம் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குக் கட்டுப்பட்டு அதன் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கிறோம். ஆனால் சிலர் அதை மதிப்பதில்லை, அப்புறம் சங்கம் எதற்கு? விதிமுறைகள் எதற்கு? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார் நக்குல்.

Related Posts