மாஸ்டர் பாடல் வெளியீட்டுவிழா – விஜய் புதுமுடிவு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
மார்ச் 2 ஆம் தேதியோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
‘மாஸ்டர்’ வாய்ப்பு தொடர்பாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில், “129 நாட்கள் இடைவெளியற்ற படப்பிடிப்பு! மாஸ்டர். இது புன்னகைக்கும் கண்களுடன் புன்னகை தவழும் முகம்! இந்தப் பயணம் என் இதயத்துக்கு நெருக்கமானது.என்னையும் என் குழுவையும் நம்பியதற்காக விஜய் அண்ணாவுக்கு நன்றி. என்னுடைய இந்த இயக்கக் குழு இல்லாமல் இந்த இமாலயப் பணியை எளிதில் முடித்திருக்க முடியாது. உங்களை நினைத்துப் பெருமையடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித்குமார் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மார்ச் 15 அன்று நடக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முந்தைய படங்களின் பாடல் வெளியீடு போல பெரிதாகச் செய்யாமல் எளிமையாக நடத்தவேண்டும் என்றும் ரசிகர்களை அழைக்க வேண்டாம் என்றும் விஜய் கூறியுள்ளாராம்.
மாஸ்டர் படப்பிடிப்பின் போது படப்பிடிப்புத் தளத்துக்கே சென்று விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாஸ்டர் பாடல் விழாவில் விஜய் அதற்குப் பதில் சொல்வார் என்பதால் அவ்விழாவுக்குப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.











