என் பெயரில் முறைகேடு நடக்கிறது – ஓவியா பரபரப்புக் குற்றச்சாட்டு
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார் நடிகை ஓவியா.
அதன்பின், ‘காஞ்சனா 4’, ‘களவாணி 2′, ’90 எம் எல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி குறித்தும், தனது வளர்ச்சி குறித்தும் ஓவியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது….
நான் ஒரே இரவில் பெரிய பிரபலமாக மாறிவிட்டதாக நினைக்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம்தான் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது. ஆனாலும் பெரிய கஷ்டங்கள், சிரமங்களுக்குப் பிறகே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவுக்கு வந்துவிட்டாலும், இப்போதுள்ள அளவுக்குப் புகழ் கிடைக்கவில்லை. ஆனால், போராடிக்கொண்டே இருந்தேன். ‘பிக் பாஸ்’ முடிந்து ஓராண்டு ஆகியும் மக்கள் என்னை மறக்காமல் நேசிக்கிறார்கள். இது ஆச்சர்யமாக இருக்கிறது.
என்னைப் பலரும் அவர்களது குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்க்கிறார்கள்.
சிலர் என்னுடைய ரசிகர்களைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள். நான் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த படங்களுக்குக் கூட என் பெயரைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபாரப் பொருட்களிலும் என் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு ஓவியா தெரிவித்துள்ளார்.
ஓவியாவின் இந்தக்கருத்தால் சில தயாரிப்பாளர்கள் மனவருத்தம் அடைந்துள்ளனராம்.











