கலங்கி நின்ற 2.ஓ படத்தயாரிப்பாளர் சுபாஷ்கரன் – கண்ணீர் விட்ட குடும்பம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ படம் நேற்று ( நவம்பர் 29 ) வெளியானது.
அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் மனைவி பிரேமாவின் பிறந்தநாளும் நவம்பர் 29 என்பதால், மனைவிக்கு சுபாஷ்கரன் கொடுத்த அறுநூறு கோடி பரிசு என்று அந்தப்படத்தைச் சொன்னார்கள்.
பட வெளியீட்டிற்காக சென்னை வந்திருந்தார் சுபாஷ்கரன். அதனால் நேற்று அவர் மனைவி பிறந்தநாளை முன்னிட்டு பெரிய விருந்து சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடந்திருக்கிறது.
இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தின்போது ,மனைவிக்காக ஒரு பாடல் பாடும்படி சுபாஷ்கரனிடம் கேட்டார்களாம்.
மகிழ்ச்சியான அந்தத் தருணத்தில் , தமிழீழ மக்களின் துயரம் சொல்லும் வகையில் காசிஆனந்தன் எழுதிய ,
மாங்கிளியும் மரங்கொத்தியும்
கூடு திரும்பத் தடையில்லை
நாங்கள் மட்டும் உலகத்திலே
நாடு திரும்ப முடியவில்லை
நாடு திரும்ப முடியவில்லை
என்ற பாடலைப் பாடினாராம்.
கண்கலங்கி அவர் பாடப் பாட, அவர் மனைவியும் தாயும் கலங்கி அழுதனராம்.
பல்லாயிரம் கோடியில் தொழில் செய்யும் தொழிலதிபர் என்கிற நிலையில் இருந்தாலும் அவருடைய ஆழ்மனதில் உள்ள வலி வெளியான தருணம் அந்த மண்டபமே திகைத்து நின்றதாம்.











