கிடா விருந்துடன் நிறைவு பெற்ற சிவகார்த்திகேயன் படம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா.
24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு
ஜூன் 19 உடன் நிறைவடைந்தது.
இறுதிநாள் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து பிரிவுபசார விழா நடத்தியிருக்கிறார்கள்.
சிவகாரத்திகேயன், சூரி, இமான், யுகபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு கிராம் தங்கம், திருக்குறள் புத்தகம் , இனிப்பு ஆகியன அடங்கிய பரிசுப்பை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அனைவருக்கும் கிடா விருந்து வைக்கப்பட்டது .
இந்நிறுவனம் தயாரித்த ரெமோ, வேலைக்காரன் ஆகிய படங்களிலும் இதுபோன்றே நடந்தது. இந்நிறுவனம் தொழிலாளர்களுக்குச் சிறப்பு செய்வதில் முன்னோடியாகத் திகழ்கிறது என்று திரையுலகினர் பாராட்டுகிறார்கள்.











