செய்திக் குறிப்புகள்

சூர்யாவின் துணிச்சலே இந்த வெற்றிக்குக் காரணம் – வெங்கிஅட்லூரி வெளிப்படை

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான படம் விஸ்வநாத் & சன்ஸ்.சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியான
இப்படம் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு, சென்னையில் ஆகஸ்ட் 18 அன்று, படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில்….

கடந்த 23 வருடங்களாக பேச்சுதான் என் வாழ்க்கையாக இருந்திருக்கிறது.ஏனெனில் நான் ஒரு ஆர்ஜே (RJ).இதுவரை ஆயிரக்கணக்கான மேடைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.‌திரைப்பட இயக்குநராகவும் மேடை ஏறி இருக்கிறேன்.இணையத் தொடரை இயக்கியதற்காகவும் மேடை ஏறி இருக்கிறேன்.ஆனால் முதன்முறையாக பாடலாசிரியராக இந்தமுறை மேடை ஏறி இருக்கிறேன்.இது எனக்கு மிக முக்கியமான மேடை ஆகும்.இது எனக்கு மிகவும் சந்தோசத்தை அளிக்கிறது.‌
இந்தப் படத்தில் நானும்,அருண் ராஜா காமராஜும் முதன்முறையாக இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறோம்.
சினிமாவிற்காக எந்த மேடை ஏறினாலும் நான் முதலில் நன்றி சொல்வது ஜி.வி.பிரகாஷ் குமாருக்குதான்.2003 ஆம் ஆண்டில் அவர் ‘வெயில்’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது,’உருகுதே மருகுதே’ பாடலை போட்டுக் காண்பித்து இந்தப்பாடல் ரீச்சாகுமா? என என்னிடம் கேட்டிருக்கிறார்.ஆனால் இப்போது அவர் எந்த அளவிற்கு ரீச் ஆகி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.மூன்று தேசியவிருதுகளை பெற்றிருக்கிறார்.ஜிவி என்னுடைய நண்பர் என்பதைவிட என்னுடைய ஆசான்.தற்போதுள்ள இளம் தலைமுறை இசைக்கலைஞர்களிடையே இசையின் அனைத்து விசயங்களையும்,நுட்பங்களையும் தெரிந்து இந்தியாவில் தயாரான அனைத்து ஜானரிலான படங்களுக்கும் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்தான்.எனக்கு இந்தப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஜிவிக்கும்,இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் நன்றி.
ஜி.வி.பிரகாஷ் மூலமாக எனக்கு அறிமுகமான ஆகச்சிறந்த மனிதநேயப் பண்பாளர் தான் வெங்கி அட்லூரி.நீங்கள் பார்த்து இரசித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்- வெங்கியுடைய ஆர்ட் அல்ல..ஹார்ட்.‌இந்தப்படத்தின் திரைக்கதையை நான் ஓராண்டுக்கு முன்பே வாசித்துவிட்டேன்.வாசிக்கும்போதே பல இடங்களில் கண்கலங்கினேன்.அதை அப்படியே திரையில் நேர்த்தியாகக் கடத்தி இருக்கிறார். அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது.இந்த வாய்ப்பு வழங்கியதற்காக அவருக்கும் நன்றி.
சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் ‘கஜினி’ படத்திற்காக நேர்காணல் செய்தேன்.நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார்.அதற்கும் அவர் காரணம் இல்லை.எங்கள் அலுவலகத்தில் இருந்த – இயங்கிய லிஃப்ட்தான் காரணம். அதற்கு அவர் வந்தவுடன் வருத்தம் தெரிவித்தார்.ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் என்று சொன்ன அந்த பண்பு… என்னை வியக்க வைத்தது.அவருடைய அந்த மனிதநேயம்தான் இன்றும் அவருக்கு ஏராளமான ஒரசிகர்கள் பின் தொடர்வதற்குக் காரணம்.அதுவும் இந்தப்படத்தில் மக்கள் சூர்யாவை அதிகஅளவு நேசித்தார்கள்,விரும்பினார்கள்,ஒரு குடும்பஸ்தனாக சூர்யாவை திரையில் காண்பித்த இயக்குநர் வெங்கிஅட்லூரிக்கு ஒரு நன்றி.
படத்திற்கு இரசிகர்களின் வரவேற்பைக் காண திரையரங்கத்திற்குச் சென்றபோது அங்கு இரசிகர்களின் அன்பும்,ஆதரவும் எங்களை உற்சாகப்படுத்தியது.தி ஒன் ‘சூர்யா’ போன்ற மாபெரும் நட்சத்திர நடிகர் இதுபோன்றதொரு ஜானரில் ஒருபடத்தில் நடிப்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது.அதற்காக அவருக்கும் நன்றி என்றார்.

நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில்,

மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.இந்தப்படத்தில் ஒரு சிறிய பங்காக நான் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.எனக்கு இந்தப்படத்தில் சிறிய கதாபாத்திரம்தான்.ஆனால் அதையும் இயக்குநர் நன்றாக எழுதியிருந்தார்.மேக்னா என்ற அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.
சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த நட்சத்திரநடிகரான தி ஒன் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்றவுடன் எனக்குள் பயம் இருந்தது.ஆனால் படப்பிடிப்புத்தளத்திற்கு வந்தவுடன் இயல்பாகப் பேசி,’மேக்னா கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம்,அதில் சிறப்பாக நடிக்கவேண்டும்’என ஊக்கம் கொடுத்தார்.அவர் அப்படிச் சொன்னபிறகு,எனக்குள் இருந்த பயம் நீங்கி இயல்பாகிவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதது.
இந்தப்படத்தில் ராதிகா சரத்குமார் – மமீதா பைஜூவும் இரண்டு பவர் ஹவுஸ்.திரையில் பார்த்தபோது இவர்களுடன் இருக்கவேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.அவர்கள் இருவரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் முத்துகள் போல் இருந்தது.ரவீனா மேடத்துடன் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது.ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களும் மறக்கமுடியாதவை.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில்,

இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்த ஊடகத்தினருக்கும்,இரசிகர்களுக்கும் நன்றி.
இந்தக்காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதைத் தக்கவைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது.ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேசமுடிவதில்லை.ஆனால் இரசிகர்களை அன்பாலும் பாசத்தாலும் ஒரேசிந்தனையுடன் இந்தப்படத்தை நிதானமாக கதையைச் சொல்லி அதில் ஒரு வெற்றியைப் பெற்று,அந்தமேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன்.இதைக் கேட்கும்போதும்… பேசும் போதும்…பெருமிதமாக இருக்கிறது.இந்த வெற்றியை அளித்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இயக்குநர் வெங்கி இந்தப்படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாகச் சொல்லும்போது அவரிடம்,’இந்தக்காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?’ எனக் கேட்டேன்.அவர் இந்தக்காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என என்னிடம் சொன்னார்.
அதன்பிறகு இயக்குநரிடம் ‘இந்தப்படத்தில் ஹீரோயின் அழகாக இல்லை என்றால்…இந்தப்படம் ஓடாது’ என்று சொன்னேன்.அப்போது நாங்கள் அதற்காக பொருத்தமான நடிகையை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்.அப்போது ஒருநாள் ‘டியூட்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருந்தேன்.மமீதாவை அங்கு பார்த்தேன்.அதன்பிறகு சரத்குமார் சார் மிகத்திறமையான பெண்,நன்றாக நடிக்கிறார் எனச் சொன்னார்.அதன்பிறகு இயக்குநர் வெங்கிஅட்லூரி மமீதாதான் ஹீரோயின் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப்படத்தை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள்,இரசித்திருக்கிறார்கள்.பல்வேறு விமர்சனங்களும் வந்திருக்கின்றன.அது மகிழ்ச்சியாக இருந்தது.இந்தப்படத்தை நானும்,சரத் சாரும் திரையரங்கில் பார்த்தோம்.அவர் எந்தப்படத்தைப் பார்த்தாலும் ஏதாவது குறையைக் கண்டுபிடித்து அதனை இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என விமர்சனம் செய்வார்.ஆனால் இந்தப்படத்தைப் பார்த்தவுடன் ‘ஐ லவ் திஸ் மூவி.நன்றாக இருக்கிறது என்றார்.
இந்தப்படத்தில் ஹீரோவிற்கு அவர்களுடைய அம்மாதான் உலகம்.அம்மா உயிருடன் இருக்கும்வரை வேறுயாருடனும் பழகமாட்டார். ஆனால் அம்மா உயிரிழந்த உடன் அவருக்குள் ஏற்படும் அதிர்ச்சி…அடுத்த உறவுகளை நோக்கிய அவரது பயணம்..இந்தக்காட்சியில் வெங்கியை மனதாரப் பாராட்டுகிறேன்.அவருடைய ‘லக்கி பாஸ்கர்’ படத்தைப் பார்த்தேன்.அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.ஆனால் இந்தப்படத்தில் ஒரு புத்திசாலித்தனமான எழுத்து இருந்தது.
கமல்ஹாசனை நேற்று கூடச் சந்தித்தேன்.அப்போது அவர் புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி? என்பது குறித்து பயிற்சியும் விவாதமும் நடத்தப்படவேண்டும் என்றார்.
சினிமாவில் ஒவ்வொரு கதைக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கும்.அந்தக்குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து வெற்றியடையச் செய்யவேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும்.அந்தக்குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும்.அது சில படங்களில் முழுவதுமாக அமையும்.அப்படி ஒரு திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.இந்தப்படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இணைந்து பணியாற்றினார்கள்.
ஜிவிபிரகாஷ் குமார் ஒரு ஜீனியஸ்.சிவக்குமாருடன் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.இந்த திரைப்படம்’அவன் அவள் அது’ என்ற திரைப்படத்தின் வேறு ஒரு வெர்சன் என்று சொன்னேன்.இதைப்போல் இந்தப்படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகளைத் தூண்டி இருக்கிறது.
ஒரு நல்ல குடும்பப்படம் என்று நான் பார்த்தது ‘சூரியவம்சம்’.அது அந்த காலகட்டத்தில்.அதற்குப்பிறகு நான் ரொம்ப இரசித்த படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.இந்தப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனமாகப் பேசும்.ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் நேர்மையாகப் பேசும்.இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.அவர் தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகை மமீதா பைஜூ பேசுகையில்,

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.எனக்கு ஆதரவாக இருந்ததற்கும்,வழிகாட்டியாக இருப்பதற்கும் நன்றி. சூர்யா சாரை மிஸ் செய்கிறோம்.இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்த ஊடகத்தினருக்கும் இரசிகர்களுக்கும் நன்றி.
இதுவரை இந்தப்படத்தைப் பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள்.பார்க்கவேண்டும்.இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு மனநிறைவு ஏற்படும் என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில்,

இந்தப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும்,தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி.அடுத்த நன்றி இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு அவருடன் ‘வாத்தி’ படத்தில்தான் முதன்முதலாக இணைந்தேன்.அந்தப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.அதற்குப்பிறகு அவருடன் இணைந்து லக்கிபாஸ்கரில் பணியாற்றினேன்.அந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் இணைந்தேன்.தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.இதற்காக அவருக்கு நன்றி.
‘வாத்தி’ திரைப்படத்தின் பாடல்- தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்களிலும் வெளியானது.வெற்றி பெற்றது.இதற்காக எனக்கு தேசியவிருதும் கிடைத்தது.அதன்பிறகு தெலுங்கு திரையுலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது.இதற்கு வெங்கிதான் காரணம்.
தற்போது வேறொரு படத்தின் பணிக்காக ஐதராபாத் சென்றிருந்தபோது என்னைச் சந்தித்த அனைவரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை பிரமாதம் எனப் பாராட்டினர்.அவர்களாக முன்வந்து இப்படத்தின் இசையையும்,அதில் என்னுடைய பணியையும் பாராட்டியபோது உண்மையில் பெருமிதமாக இருந்தது.இதுதான் உண்மையான வெற்றி என்றும் நான் கருதுகிறேன்.
இந்தப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஆந்திராவில் சூர்யா நடித்த படத்தின் வசூல் புதியசாதனையை படைத்திருக்கிறது.இது சந்தோசமாக இருக்கிறது.
சூர்யாவிற்கு இது முக்கியமான வருடம்.அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.மூன்றாவது திரைப்படத்தையும் விரைவில் வழங்குவார்.தீபாவளி அல்லது இந்தஆண்டின் இறுதிக்குள் வெளியாகும்.இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். மூன்றாவது படத்திலும் இணைந்திருக்கிறேன்.எங்கள் ஜோடியும் ஹாட்ரிக் அடிக்கும் என நம்புகிறேன்.
படப்பிடிப்புத் தளத்தில் நானும் ராதிகா மேடத்திடம் அடிவாங்கி இருக்கிறேன்.அவர் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன்.சூர்யாவைப்போல் ராதிகா மேடத்திற்கும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு.அவர்களுடைய நடிப்பில் ‘தாய்க்கிழவி’ மிகப்பெரிய வெற்றி.அதைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.இந்தப்படமும் வெற்றி.இந்தப்படத்தில் ராதிகா மேடம் நடித்த காட்சிகளை பின்னணி இசைக்காக பார்த்தபோது என்னையும் அறியாமல் நான் அழுதேன்.
இந்தப்படத்திற்காக இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கினோம்.அந்த இரண்டு பாடல்கள்தான் தற்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்று,அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
மேஜிக் மொமென்ட்ஸ் எப்போது வரும் என்று தெரியாது.இசையில் எப்போது வேண்டுமென்றாலும் அந்த மேஜிக் நிகழும்.இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன்.
இந்தப்படத்திற்கு இதுவரை ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை.அது இதன் மிகப்பெரிய சிறப்பம்சம்.இது மிக அரிதாக நிகழக்கூடியவை என்றார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில்,

இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்த இரசிகர்களுக்கும்,ஊடகத்தினருக்கும் நன்றி.இதற்குமுன் வாத்தி,லக்கிபாஸ்கர் என இரண்டு படங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்தீர்கள்.இந்தப்படத்தை நான் முதன்முதலாக தமிழில் இயக்கியிருக்கிறேன்.
இந்தப்படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது.படம் நிறைவடைந்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ? என்ற பதட்டத்தில் என் கால்கள் நடுங்கின.ஆனால் படம் முடிவடைந்ததும் ஒவ்வொருவரும் என்னைப் பாராட்டினார்கள்.கை குலுக்கினார்கள்.கட்டி அணைத்தார்கள்.அவர்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.இது என்னால் மறக்கவே இயலாது.இதற்காக அனைவருக்கும் நன்றி.
இந்தப்படத்தில் நடித்த சுனில்,பவானி ஸ்ரீ,இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்,படத்தை விநியோகம் செய்த லிங்கசாமி,ராதிகா மேடம்,மமீதா பைஜூ ஆகியோருக்கு நன்றி.
மமீதா பைஜூ தூய ஆத்மா.எனக்குக் கிடைத்த தங்கை.சினிமாவை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத அற்புதமான நடிகை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்.
ஜி.வி.பிரகாஷ்குமாருடன் ‘வாத்தி’ படத்திலிருந்து பயணிக்கிறேன்.முதல்நாள் அவரைச் சந்தித்து,’உங்களை…சார்..! ப்ரோ..! என எப்படி அழைக்கவேண்டும்?’ எனக்கேட்டேன்.’ப்ரோ’ என்று கூப்பிடுங்கள் என்றார்.ஆனால் இப்போது நாங்கள் உண்மையிலேயே சகோதரர்கள்.நாங்கள் இருவரும் இணைந்து மூன்றுபடங்களில் பணியாற்றிவிட்டோம்.ஒருபாடலை முழுமையாக நிறைவு செய்தபிறகும் அதை வேண்டாம் என்று சொன்னால் சிறிதுகூட முகம் சுழிக்காமல் மீண்டும் புதிதாக ஒரு பாடலை உருவாக்கித் தருவார்.இதற்காக கட்டணம் எதையும் வாங்கவும் மாட்டார்.அவர் நான் எதைக்கேட்டாலும் அதை மறுக்காமல் வழங்குவார்.இந்தப்புரிதலுக்கு நன்றி.
‘தி‌ ஒன்’சூர்யா இப்போது இங்கே இல்லை.இருந்தாலும் அவருடைய அன்பும்,ஆதரவும் அனைவருக்கும் இருக்கிறது.நான் அவரிடம் கதையைச் சொன்னபோது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல் இந்தக் குடும்பக்கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் என நான் நினைக்கிறேன். இரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது.
இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறது என்றார்.அதைக் கேட்கும்போது எனக்கு சிலிர்த்தது.
சூர்யா இரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதைத்தான் முக்கியமானதாகப் பார்க்கிறார்.இதுவும் இரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்.
திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் படத்தை பார்க்கும் இரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ அல்ல விஸ்வநாதன் குடும்பத்தினருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts