செய்திக் குறிப்புகள்

கணம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு – தொகுப்பு

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்வில் கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது…….,

இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களின் புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்பது போன்ற பெரிய விசயங்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஆனால், பாசத்தை மையமாக வைத்து டைம் ட்ராவல் படத்தை அழகாக நகர்த்த முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் திரைக்கதையில் செய்து காட்டியிருக்கிறார். இசையில் மெலடியை அழகாகக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலில் பணியாற்றும்போது, நேரத்தைக் கைப்பற்ற முடிந்தது. அப்படத்தில் ‘இன்னும் நேரா காயங்களை எப்படி ஆற்ற’ என்ற வரிகள் மிகவும் எனக்குப் பிடிக்கும். என்ன நடந்து கொண்டிருக்கிறது  என்று அவனுக்குத் தெரியும். ஆனால், அந்தக் காயம் இன்னும் வரவில்லை. இப்படி இன்னும் நேராத காயத்தை எப்படி நான் ஆற்றப் போகிறேன்? என்று கேட்கக்கூடிய கேள்வி தான் அந்த வரி. ஒரு நபர் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ?அவர்களும் அதே இடத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால், காலம் உங்களைப் பிரித்து வைத்துவிடும். பொதுவாக நாம் இங்கிருந்து இவ்வளவு கிலோமீட்டர் என்று புவியியல் தூரங்களைப் பற்றித் தான் பேசுவோம். ஒரே இடத்தில் இருந்துகொண்டே நேரம் தூரமாக இருக்க முடியுமா? இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் ஆனால், வெவ்வேறு காலகட்டத்தில் இருக்கிறார்கள். அப்போது அந்த நேரத்தை கைப்பற்றக் கூடிய வரிகளை ஆராய முடிந்ததற்கு ஸ்ரீக்கு நன்றி. இதுமாதிரி புதுப் புது வகையான படங்கள் வரும்போதுதான் சவாலான வரிகளை எழுத முடியும். வித்தியாசமான விசயங்களையும் செய்ய முடியும்.
நடிகர் கார்த்தி இவ்ளோ அழகாகப் பாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. இம்மாதிரியான படத்திற்கு அழகாக தொகுத்து வழங்க நாசர் சாரால் தான் முடியும். அவரைத் தவிர வேறு யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய ரீத்து, சின்ன வயது பசங்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். வித்தியாசமான கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரசிகர்களுக்கு புதுமுகங்களை வைத்து படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் எஸ்.ஆர். பிரபுவிற்கும், ஸ்ரீ கார்த்திக்கும் நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் பேசும்போது…….

எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு நல்ல படத்தைக் கொடுத்து இருக்கிறீர்கள். இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கும் போது எல்லோருக்கும் சிறந்த அனுபவமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் சுஜித் பேசும்போது……..,

இந்தக் கணத்திற்காகத் தான் காத்திருந்தோம். எஸ்.ஆர்.பிரபு, அமலா மேடம் மற்றும் அனைவருக்கும் நன்றி. அவர்களை கேமராவில் படம் பிடிப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் தொடர்ந்து உறுதுணையாக இருந்தார்கள். டைம் டிராவல் என்பது ஒரு நிலை. ஆனால், அதைவிட முக்கியமானது நம்முடைய உணர்வுகள் தான். அதை எங்களால் முடிந்த அளவிற்குச் செய்திருக்கிறோம். எப்படி இருக்கிறது என்று நீங்கள் திரையில் பார்த்து விட்டுச் சொல்லுங்கள் என்றார்.

நடிகர் நாசர் பேசும்போது………

4 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் டைம் மெஷின் தரை இறங்கி இருக்கிறது. ஒரு தயாரிப்பாளரே அழைத்து இயக்குநரிடம் கதை கேளுங்கள் என்று கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு அவருடைய நிறுவனத்தில் ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பார். அவர் ஸ்ரீ கார்த்தியைக் கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், சைன்ஸ் பிக்ஷன் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான விசயம். 
இந்தியாவில் இது போன்று படம் அதிகம் வருவதில்லை. ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போது குழந்தை மாதிரி மாறி விட்டேன். நிறையப் பேசினோம் இந்த விசயங்கள் புரியாது அந்த விசயங்கள் புரியாது, என்று பல மணி நேரம் சண்டை கூடப் போட்டு இருக்கிறேன். இந்தக் கதையை ஜுராசிக் பார்க் படத்தில் அந்தத் தாத்தா கூறுவதுபோல விளக்கமாகக் கூறினால் தான் புரியும் என்றேன். ஆனால் இப்படம் எனக்கு அற்புதமான பயணமாக இருந்தது. அறிவியலைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் நிறைய விசயங்களைப் பேசினோம். இந்தக் குழுவுடன் பணியாற்றியதில் 30 வயது குறைந்தது போல உணர்ந்தேன்.
ஒரு புத்தகத்தில் அழகான கதை இருக்கவே இருக்கிறது என்றால் அதில் உள்ள காகிதங்கள் தான் நான். உண்மையாகவே ஒரு தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் கதை. அமலா அழகான ஆன்மா கொண்டவர். அவரின் அறிமுகக் கால கட்டத்தில் இருந்தே பழக்கம்.  அவர் இந்தத் துறைக்கு மீண்டும் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு டைம் டிராவல் தேவையே இல்லை. அந்தக் காலம் உறைந்து, அப்போது இருந்தது போலவே இருக்கிறார். அவரைப் பார்ப்பதை விட பேச வைத்துக் கேட்டால் அழகாக இருக்கும். பேச்சில் தெளிவு, பரிவு, பாசம் அனைத்தும் நிறைந்திருக்கும். ஆகையால் தான் நான் தள்ளி நின்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.
அமலா கதாபாத்திரம், என்னுடைய கதாபாத்திரம், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக். சின்ன பசங்களைப் பார்க்கும்போது சாயலில் அவர்கள் போலவே இருக்கிறார்கள்.
இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இந்தத் தருணம் மறுபடியும் கிடைத்தால் நான் தவறு செய்யும்போது அதை செய்யாமல் இருக்க முடியாதா? என்று தோன்றும். ஒரு காலத்தில் கோட்பாடு ரீதியாக இது நடக்கக் கூடும். அதை இந்தப் படத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த படம் பொழுதுபோக்கான படம் என்பதை விட ஈடுபாட்டுடன் பார்க்கக்கூடிய படம் என்று சொல்வதே சரியாக இருக்கும். 2 1/2 மணி நேரம் சிரித்துக்கொண்டே இருக்கும் படம் கிடையாது. நம் மனதினுடைய மெல்லிய உணர்வுகளைத் தூண்டி விடணும். அது இப்படம் நிச்சயம் செய்யும்.
நான் கார்த்தியிடம் வயதானவன் போல் மேக்கப் போடுவதற்கு பதிலாக வயதானது போல் நடித்து விடுகிறேன் என்றேன். இல்லை சார் வயதானவர் போல் நடிக்க வேண்டாம் இருந்தாலே போதும் என்றார். இதற்காக கார்த்தியுடன் வாக்குவாதமே நடந்தது.  இப்படத்திற்கு என்னுடைய கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவதற்கு 2 மணி நேரம் ஆகும். இந்த உலகத்தில் மிகவும் பொறுமையாக இரசிக்கக் கூடிய, உள்வாங்கக் கூடியவர் கமல் சார்தான். உடம்பெல்லாம் எப்படி மேக்கப் போடுகிறோ என்று தெரியவில்லை. இந்தப் படத்திற்கு மேக்கப் போடுவது விலை உயர்ந்த விசயம். இதற்காக பிரபு பெங்களூருவில் இருந்து சிறப்பு நிபுணரை வரவழைத்தார். பிரபு எனக்கும் கார்த்திக்கும் மட்டுமல்ல, இந்தப் படத்திற்கு என்ன தேவையோ? அதை எல்லாவற்றையும் வழங்கினார்.
ஷர்வானந்துடன் சில படங்களில் பழகியிருக்கிறேன். விடா முயற்சி என்பது பழக்கமான வார்த்தையாக இருந்தாலும், ஷர்வானந்துக்கும் பொருந்தும். நானும் அவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அதில் அவருக்கு எது மேலே பட்டாலும் துடைத்துக்கொண்டே இருக்கும் படியான கதாபாத்திரம். அதை மிக அழகாகச் செய்திருந்தார். அந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.
ரீத்து சிறு வயது முதலே என்னுடன் நடித்துக் கொண்டு இருக்கிறது. நாங்கள் இருவரும் தீனி படத்தில் நடித்தோம். ஒரு சிறிய தீவு, அதிலிருந்து வெளியே போகவே முடியாது. ஒரு நாளில் 2 மணி நேரம் தான் கடல் உள்வாங்கும், அந்தச் சமயத்தில் தான் சென்று வர முடியும். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு நடிக்கக் கூடியவர். இப்படத்திற்கும் அவருடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் எல்லா மனங்களையும் போய்ச் சேரும் என்றார்.

நடிகர் ரவி ராகவேந்திரா பேசும்போது…….,

இந்தக் கணம் திரும்பிப் பார்க்க வேண்டிய கணம். இந்தக் கணம் எஸ்.ஆர்.பிரபுவின் கணம், ஸ்ரீ கார்த்திக்கின் கணம், இது தமிழ் சினிமாவின் கணம். இது மாதிரியான கடினமான கதைக்களத்தைக் கையாள்வது சுலபமில்லை. நாசர் சார் கூறியது போல இதைப் புரிந்துகொள்வது எளிமையானது அல்ல. இதை முயற்சி எடுத்துச் செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஸ்ரீ கார்த்திக் டைம் டிராவல் படம் என்று 40 நிமிடம் கதை கூறினார். ஆனால், எனக்கு ஒன்றும் புரியவில்லை. இறுதியாக உங்களுக்கு ஜோடி அமலா என்று கூறினார். இதை முதலிலேயே கூறி இருக்கலாம் அதை விடுத்து ஏன் கதையைக் கூறினீர்கள் என்று கேட்டேன். அமலாவுடன் நடித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது.
ஷர்வானந்த் மிகவும் உணர்வுபூர்வமான நடிகர். ஒரு காட்சி நன்றாக வந்திருந்தாலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார். பரிபூரணமாக வந்திருக்கிறதா என்று பார்ப்பார். இப்படத்தில் அதிக நடிகர்களுடன் எனக்கு காட்சிகள் இல்லை.
அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் செயல் திறன் மிக்கவர்கள். ஒரு வாரத்திற்கு 30-40 கதைகள் கேட்டுத் தான் தேர்ந்தெடுப்பாராம் எஸ்.ஆர்.பிரபு. அத்தனை கதைகளைக் கேட்டுவிட்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பது எளிதல்ல. எங்கு திறமை இருக்கிறதோ அதைத் தேடி கண்டுபிடித்து விடுவார். அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இப்படம் நிச்சயம் வெற்றியடையும்.
அதேபோல அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஸ்ரீ கார்த்திக்கும் சிறந்த இயக்குநராக வருவார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
எஸ்.ஆர்.பிரபுவிடம் நம்பிக்கை இருந்தாலும், ஸ்ரீகார்த்தியின் இயக்கம் அற்புதமாக இருந்தது. ஏனென்றால், இந்தப் படம் சாதாரண படமல்ல, முன்னுக்கும் பின்னுக்கும் சென்று வரவேண்டும். குழப்பங்கள் வராமல் செயல்படுத்த வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்றார்.

மாஸ்டர் ஜெய் பேசும்போது…….,

ட்ரைலர் பார்த்து அழ ஆரம்பித்து விட்டேன். எப்போது படம் வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.
அமலா அம்மா என்னுடைய நிஜ அம்மா மாதிரி தான் இருக்கிறார். இங்க பார்த்ததும் என் அம்மாவை மறந்து விட்டு இவர் தான் என் அம்மா என்று கட்டிப்பிடித்து விட்டேன். இவரைப் பார்க்கும்போது எனக்கு அம்மா வந்து விட்டார் என்று நேர்மறையாக எண்ணம் வரும் என்றார்.

மாஸ்டர் ஹித்தேஷ் பேசும்போது…….,

இந்தப் படத்திற்காக 4 வருடங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம். ஸ்ரீ கார்த்திக் அண்ணாவிடம் நிறைய கற்றுக் கொண்டோம். அவர் இயக்குநர் மட்டுமல்ல, நடிகர், திரைக்கதை எழுத்தாளர், மிகச் சிறந்த படைப்பாளர் இது அனைத்தையும் அவரிடம் நான் பார்த்திருக்கிறேன்.  ஒரு காட்சியை விளக்கும் போது சாதாரணமாக விளக்கம் கொடுக்க மாட்டார். எல்லாருக்கும் புரியும் படி கூறுவார்.
என்னை முதலில் பார்க்கும் போது அனைவரும் நீ அப்படியே சதீஷ் சார் மாதிரி இருக்கிறாய் என்று கூறினார்கள். சதிஷ் அண்ணா அவருடைய 10ஆம் வகுப்பு படித்த போட்டோவை காட்டினார். அதில் அப்படியே அவரைப் போலவே நான் இருந்தேன். அண்ணாவுடன் நடிக்கும் போது நான் முதலில் பதட்டமாக இருந்தேன். ஆனால், அண்ணா அப்படியல்ல ரொம்ப வேடிக்கையாக, ஜாலியாக இருந்தார். பிறகு அவருடன் இணைந்து நான் நாய் சேகர் படத்தில் நடித்தேன். அதுவும் வேடிக்கையாக இருந்தது.

மாஸ்டர் நிதேஷ் பேசும்போது…..

இந்தப் படம் நடித்தது போல இல்லை. விடுமுறைக்குச் செல்வது போலத்தான் இருந்தது. நாங்கள் அனைவரும் படம் நடிக்காமல் வாழ்ந்தோம். கார்த்திக் அண்ணா எங்களுக்குக் காட்சிகளைச் சொல்லிக் கொடுக்க மாட்டார். அவர்களுக்கு ஒரு மாதிரியும், எங்களுக்கு ஒரு மாதிரியும் தான் சொல்லிக் கொடுப்பார். எனக்கு அவர் ஒரு வழிகாட்டியாகத் தான் இருந்தார்.
நான் பெரிதானால் ரமேஷ் அண்ணா மாதிரி இருந்தால் ஜாலியாக தான் இருக்கும். சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோதே நாங்கள் மிகவும் அட்டகாசம் செய்தோம். ஹைதராபாத் சென்ற பிறகு எங்களைப் பிடிக்கவே முடியவில்லை. ஒளிப்பதிவாளரின் மேஜிக்கை நீங்கள் திரையில் கண்டு மகிழ்வீர்கள் என்றார்.

நடிகர் ரமேஷ் திலக் பேசும்போது……….

ஸ்ரீ கார்த்திக் என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்ததற்கும், ட்ரீம் வாரியர் நிறுவனம் மற்றும் அமலா மேடம் உடன் நடித்ததற்கும் நன்றி. நாசர் சாருடன் மூன்றாவது படம். ஆர்ட்டிகிள் 15 படத்தில் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்று கூறினேன். அவர் என்னைப் பார்த்தது மகிழ்ச்சி என்று அவர் கூறியதில் மகிழ்ச்சி.
எஸ்.ஆர்.பிரபு சாருக்கு நன்றி. அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

நடிகர் சதீஷ் பேசும்போது………

இந்தக் கதை கேட்கும் போது இது மாதிரி யாரும் கதை கூறியிருக்க மாட்டார்கள். இடையில் கொரோனா வந்தாலும் படம் பொறுமையாக வெளியானாலும் நன்றாக வர வேண்டும் என்பதில் எஸ்.ஆர்.பிரபு பிடிவாதமாக இருப்பார். அவருக்குத் திருப்தி ஆகும் வரை விடமாட்டார். இப்படம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். இப்பவே செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பயணித்துப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது.
இந்தப் படம் மூலம் ஷர்வானந்த் என்ற சிறந்த நண்பர் கிடைத்திருக்கிறார். எனது அப்பா, அமலா மேடம் உடைய பெரிய விசிறி. நியாயமாக அமலா மேம் அக்காவாக நடித்திருக்க வேண்டும். ஆனால், அம்மாவாக நடித்திருக்கிறார். ரீத்து வர்மாவுடன் ஒரு நாள் தான் படப்பிடிப்பு இருந்தது. அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. நாசர் சார் எல்லோரையும் நன்றாகக் கவனித்துக் கொள்வார். நடிப்பைத் தாண்டி நன்றாகச் சமைப்பார்.
ஹித்தேஷ் என்னைப் போலவே இருக்கிறார். அவருடைய அப்பா தான் மகன் பெரிய பாத்திரத்தில் நடித்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் என்றார்.

நடிகை ரீத்து வர்மா பேசும்போது……,

தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திற்குப் பிறகு இது எனக்கு இரண்டாவது படம். தமிழ் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.
இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பு கொடுத்த எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அனைவருக்கும் ஆதரவளித்து வருகிறது. இயக்குநர் சிறப்பாகக் கதை கூறினார். அமலா மேடம் உள்ளேயும் வெளியேயும் அழகான ஆன்மா உடையவர். சமுதாயத்திற்கும் நிறைய பங்களிப்பு செய்து வருகிறார்.
ஷ்ர்வானந்த் புத்துணர்ச்சியுடன் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் பயணத்தை உணர்வுபூர்வமாகக் கொண்டு சென்றிருக்கிறார். நாசர் சாருடன் 4 படங்களில் நடித்துவிட்டேன். சதீஷ் அண்ணா மற்றும் ரமேஷ் திலக் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. சுஜித், ஸ்ரீஜித் போன்ற புத்திசாலித்தனமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது நீங்கள் சிரிப்பீர்கள், அழுவீர்கள், படத்துடன் பின்னிப் பிணைந்து இருப்பீர்கள் என்றார்.

இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் பேசும்போது…….

இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. குறிப்பிட்ட வயது வரை நேரத்தை நான் மதித்தது இல்லை. ஒரு கட்டத்தில் மதிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. எனது அம்மா சிறிது காலம் தான் இருப்பார் என்ற சூழ்நிலை வரும் போது தான் நேரத்திடம் நான் பேசினேன்.
நான் கதை கூறும் போது என் நண்பர்கள் ஆர்வமாகக் கேட்பார்கள். மறுபடியும் கதை கூறச் சொல்லி ஊக்குவித்தார்கள். அது தான் இப்படம் இயக்கக் காரணமாக அமைந்தது. 
நிறையப் பேரிடம் கதை கூறினேன். இறுதியாக எஸ்.ஆர்.பிரபு ஒப்புக் கொண்டார். என்னைப் பொறுத்தவரை அவர் செலிபிரிட்டி தயாரிப்பாளர். அவருக்கும் எஸ்.ஆர்.பிரகாஷ் இருவருக்கும் நன்றி. ரோலர் கோஸ்டர் தயார் செய்து கொடுத்தார். நான் கற்பனை செய்தது மற்றும் எதிர்பார்த்தது போலவே எனக்கு எல்லாமே செய்து கொடுத்தார்.
“ஒரு முறை என்னைப் பாரம்மா இந்த வரிகள் தான் இப்படத்தின் ஆன்மா.”
என் அம்மாவை நினைத்து 2 வருடங்கள் கதை எழுதினேன். ஆனால் எழுதும் போது அமலா மேடமை மனதில் வைத்துத் தான் எழுதினேன். ஆனால் அவர் சம்மதிப்பாரா என்று எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டேன். அவரும் ஏற்பாடு செய்தார். அமலா மேம் கதை கேட்டதும் ஆவலுடன் உடனே ஒப்புக் கொண்டார்.
எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தை இரட்டை மொழிகளில் பெரிதாக எடுக்க வேண்டும் என்றார். பிறகு தான் ஷர்வானந்த் பொருத்தமாக இருப்பார் என்று யோசித்தோம். இப்படத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார். அதே போல் நாசர் சாரை நினைத்துத் தான் அவருடைய கதாபாத்திரம் எழுதினேன். நாங்கள் நினைத்ததை விட அருமையாக வந்துருக்கிறது.
மூன்று குழந்தைகளின் பெற்றோருக்கு மிக்க நன்றி. 5 வருடங்கள் வேறு எங்கும் அனுப்பாமல் நம்பிக்கை வைத்துக் காத்திருந்தார்கள். ரவி  ராகவேந்தரா மிகவும் உறுதுணையாக இருந்தார். தூய தமிழில் பாட வைக்கவும் ஆட வைக்கவும் மதன் கார்க்கியால் தான் முடியும். இப்படம் என்னுடைய கனவு மட்டுமல்ல. என் குடும்பத்தில் உள்ள அனைவரின் கனவு என்றார்.

நடிகை அமலா பேசும்போது……

ஒரு படத்தைப் பற்றி சாதாரணமாக இவ்வளவு பேச மாட்டார்கள். என்னுடைய இளமைக் காலத்தில் ஆதரித்த தமிழ் மக்களிடம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்திருக்கிறேன். இப்படம் எனக்கு மிக மிகச் சிறப்பான படம்.
எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந்தப் படம் அனைவரையும் இணைக்கும். உங்களைச் சிரிக்க வைக்கும் அர்த்தமுள்ள படம். ஆழமான அன்பை உணர்வுபூர்வமாக அழகாகக் கொடுத்திருக்கிறார் ஸ்ரீ கார்த்திக். அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இணைக்கும்.
இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன். இந்தக் கதாபாத்திரம் கொடுத்ததற்கு ஸ்ரீ கார்த்திக்கு நன்றி. உங்கள் அம்மாதான் இந்தப் படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்குத் தெரியும். இந்தப்படத்தை அவரும் நம்முடன் பார்த்து நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்.
எஸ்.ஆர்.பிரபு, நீங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த தயாரிப்பாளர். உங்களுடைய எல்லாப் படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சினிமா துறையில் இருக்கும் இளம் கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள். இப்படத்தின் குழுவுடன் பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் எந்தப் படம் பார்த்தாலும் பார்வையாளராகத் தான் பார்ப்பேன். வரும் செப்டம்பர் 9 ஆம் தேதியும் இப்படத்தை பார்வையாளராகப் பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார்.

நடிகர் ஷர்வானந்த் பேசும்போது……..

எங்கேயும் எப்போதும் படத்திற்குப் பிறகு ஏன் நீங்கள் தமிழில் நடிக்கவில்லை என்று கேட்டார்கள். கணம் படம் போன்று கதைக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன். நான் கதையை மட்டுமே நம்பி இருக்கிறேன். நமக்கு எப்போதும் எஸ்.ஆர்.பிரபு போன்ற தயாரிப்பாளர்கள் தேவை. இப்படத்திற்குத் தூண் போல் இருந்திருக்கிறார். ரவி ராகவேந்திரா போன்று அருமையான நடிகரை யாரும் பார்க்க முடியாது. நாசர் சார், ரீத்து வர்மா இயற்கையாக நடிக்கக் கூடியவர்கள். இப்படத்தின் மூலம் சதீசும், ரமேஷும் நண்பர்களாகக் கிடைத்திருக்கிறார்கள்.
அமலா மேடமை எப்போது பார்த்தாலும் அம்மாவாகத் தான் தோன்றும். இந்தப் படம் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் உடைய படம். இன்னும் 5 வருடங்களுக்கு இது போன்று படம் வருவது சாத்தியமில்லை. இந்தியாவின் சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது…..

அருவி படத்தின் கதையைக் கேட்கும் போது திரையில் சிறப்பாகக் கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை எப்படி வந்ததோ அதே நம்பிக்கை ஸ்ரீ கார்த்திக் கதை கூறும்போது வந்தது. இப்படத்தை பட்ஜெட் படமாக எடுப்பதை விட நிறைய செலவு செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீயிடம் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக நீங்களே எடுங்கள் என்று கூறினார்.
மாயா படத்தில் இருந்தே ஒவ்வொரு கதையையும் ஷர்வானந்துக்கு அனுப்பிக் கொண்டே இருப்பேன். ஆனால், இந்தக் கதையைக் கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். அமலா மேடமிடம் இந்தக் கதையைக் கூறுவதற்குத் தயக்கம் இருந்தது. இருந்தாலும், இந்தப் படத்தில் நடிப்பது பற்றி அவரே முடிவெடுக்கட்டும் என்று நினைத்தோம். அவர் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஸ்ரீ ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெடுவார். தொழிற்துறையில் காலகட்டத்திற்கு ஏற்ப அதைப் புரிந்து கொண்டு அந்தத் துறையை மேம்படுத்தக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். அப்படி ஒருவர் தான் ஸ்ரீ கார்த்திக். படம் மட்டுமல்ல, பாடல்களுக்கும் உடன் இருந்து பணியாற்றினார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நடுக்கம் இருக்கும். ஆனால், இப்படத்தில் அது இல்லை.
டைம் ட்ராவல் மற்றும் உணர்வுபூர்வமான விசயங்களும் ஒன்றாகப் பயணிக்கும் போது திருப்தியாக இருக்கும். நிறையக் காட்சிகள் இல்லையென்றாலும், கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாகப் புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்த ரீத்து வர்மாவிற்கு நன்றி.
சமீபமாக எங்கள் நிறுவனப் படங்கள் ஓடிடியில் வெளியாவதால் இனிமேல் இப்படித்தான் இருக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு அப்படியில்லை என்று கூறினேன்.இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts