விமர்சனம்

நாட் ரீச்சபிள் – திரைப்பட விமர்சனம்

அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு பெண் காணாமல் போகிறார். அவர்களைக் கொலை செய்தது யார்? என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம்.

காவல்துறையில் இந்தக் கொலைவழக்கில் விசாரணை அதிகாரிகளாக வரும் விஷ்வா மற்றும் சுபா ஆகியோர்தாம் படம் நெடுக வருகிறார்கள். விஷ்வா நிதானமாகவும் சுபா கோபமாகவும் அணுகுவது வழக்கு விசாரணையின் தன்மைகளை உணரவைக்கிறது. அவர்கள் இருவருக்குமான உறவு சுவாரசியம்.

இவர்களுக்கடுத்து கவனிக்க வைக்கிற வேடம் சாய் தன்யாவுக்கு. மனநிலை தவறிய அவரை தொடக்கத்திலிருந்து அவ்வப்போது காட்டி வருகிறார்களே எதற்கு? என்கிற ஐயத்துக்குக் கடைசியில் சிறப்பான விடை இருக்கிறது.

ரியா என்கிற வேடத்தில் நடித்திருக்கிற ஹரிதாஸ்ரீயும் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறார்கள்.

இலக்கியா மற்றும் சாய்ரோகிணி ஆகியோரின் வேடங்கள் இளம்பெண்களுக்குப் பாடம்.

சுகுமாரன்சுந்தரின் ஒளிப்பதிவில் படத்தின் கருப்பொருளை உணரமுடிகிறது.

சரண்குமார் இசையில் தாழ்வில்லை.

எழுதி இயக்கியிருப்பதோடு படத்தொகுப்பும் செய்திருக்கிறார் சந்துரு முருகானந்தம். கொலை வழக்குகளை காவல்துறை அணுகும் விதம் கதாபாத்திரங்கள் ஆகியனவற்றை நிறைவாகச் செய்திருக்கிறார்.

படத்தின் மையக்கதை நம் வீட்டில் ஒரு பெண் இருந்தால் அண்டை வீட்டுப் பையனை நம்பக்கூடாது என்கிற இடத்திலிருந்து அங்கு ஒரு பெண் இருந்தாலும் அவளையும் நம்பக்கூடாது எனும் தொனியில் அமைந்திருப்பது வருத்தம்.

Related Posts