சூர்யா 41 படப்பெயர் மற்றும் முதல்பார்வை வெளியானது
பாலா இயக்கத்தில் சூர்யா,தெலுங்கின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி, அறிமுகநாயகி மமிதா உட்பட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா.
இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது.
இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.
இந்நிலையில், அப்படம் நின்றுவிட்டது இனி அவ்வளவுதான் என்று வந்த பொய்ச்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறேன் என்று சூர்யா அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ஜூலை 20 ஆம் தேதி அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் பாலாவின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இப்படத்துக்கு வணங்கான் என்று பெயர் சூட்டப்பட்டு முதல்பார்வையும் வெளியிடப்பட்டுள்ளது.











