உருவாகிறது நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் – அதிகாரத்தை இழக்கிறார் டி.ராஜேந்தர்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக. டி.ராஜேந்தர் இருக்கிறார்.
அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.
அதில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர், இந்தச் சங்கத்துக்குத் தலைவராக இருப்பதோடு, இந்தச் சங்கத்தின் தலைவராக இருப்பதால் தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பு எனும் அமைப்பின் தலைவராகவும் ஆனார்.
ஃபெடரேசன் என்று திரையுலகினரால் சொல்லப்படும் கூட்டமைப்பு என்பது, திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு.
தமிழ்த்திரையுலகின் உச்சநீதிமன்றம் என்று சொல்லுமளவுக்கு முக்கியச்சிக்கல்கள் அனைத்தையும் பேசித் தீர்க்கிற அமைப்பு.
2019 டிசம்பரில் டி.ராஜேந்தர் சென்னை,திருவள்ளூர் காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரானதால் கூட்டமைப்புக்கும் தலைவரானார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போன்ற அதிகாரமிக்க அந்தப் பொறுப்பு டிராஜேந்தரின் கையை விட்டுப் போகவிருக்கிறது.
எப்படி?
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழகமெங்கும் இருக்கும் முக்கிய விநியோகஸ்தர்களான அருள்பதி, மதுரை அன்பு, சீனு, இராஜமன்னார், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து ஒரு புதிய சங்கத்தை உருவாக்குகின்றனர்.
தமிழ்நாடு நடப்பு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் என்கிற பெயருடன் அந்தச் சங்கம் தொடங்கப்படவிருக்கிறது.இந்தச் சங்கத்தில் இப்போது படங்களை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்களைக் கொண்டதாக அமையவிருக்கிறது.
இச்சங்கத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமின்றி தமிழ்த் திரைப்படங்களுக்குக் கடன் கொடுக்கும் நிதியாளர்கள் (ஃபைனான்சியர்) ஆதரவும் உண்டாம்.
இதனால், இந்தச்சங்கம் உருவானால்,இப்போது தமிழகமெக்கும் இருக்கிற விநியோகஸ்தர்கள் சங்கங்கள் வலுவிழக்கும். அதோடு இயல்பாக கூட்டமைப்பும் செயலிழக்கும். அதனால் அதன் தலைவர் பொறுப்புக்கும் மதிப்பில்லாமல் போகும்.
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின் தனியாகத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற சங்கம் தொடங்கினார் டி.ராஜேந்தர்.
இப்போது அதேபோல் தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் என்கிற சங்கத்தை உருவாக்கி அவரை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள் என்று திரையுலகில் பேச்சாக இருக்கிறது.











