விக்ரம் பா.இரஞ்சித் படம் – ராஷ்மிகா நடிக்க மறுப்பு
பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார்.
இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
‘சீயான் 61’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்பு செல்வா. சண்டைக் காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார்.
இப்படத்தின் பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள, இந்தப்படத்தில் விக்ரமுக்கு இணையாக நடிக்க ராஷ்மிகாமந்தனாவைக் கேட்டார்களாம். படத்தின் கதையைக் கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போய் நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம் ராஷ்மிகா.
ஆனால், அதற்குப் பின்பு சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கான தேதிகள் ஆகியனவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
அதன்பின், பல நடிகைகளைப் பரிசீலித்து கடைசியில் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகாமோகனனை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
முக்கியமான சம்பளப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாம். படப்பிடிப்புத் தேதிகள் முடிவானவுடன் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.











