செய்திக் குறிப்புகள்

விஜயானந்த் படத்தின் சிறப்புகள் – இயக்குநர் பேட்டி

‘ட்ரங்க்’ எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘விஜயானந்த்’.

இதில் ‘ட்ரங்க்’ படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி.ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் தமிழ்ப்பதிப்பு வசனங்களையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார்.

‘ஸ்கெட்ச்’ படப் புகழ் ரவி வர்மா சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்.

சுயசரிதை படைப்பாகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி ஆர் எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காளிதாசா சாகுந்தலா…’ எனத் தொடங்கும் பாடலின் காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடல் கோபி சுந்தர் இசையில், பாடலாசிரியர் மதுர கவி எழுத, பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் பாடகி கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடல் வெளியிட்டு விழா பெங்களூரில் உள்ள பிரபலமான ஓரியன் மால் எனப்படும் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த முன்னணியினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

1976 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வாகனத்துடன் சரக்குப் போக்குவரத்துத் துறையில் இறங்கிய விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் வி. ஆர்‌ எல் எனும் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். இவரது வெற்றிப் பயணத்தின் பின்னணியிலுள்ள அவரது கடுமையான உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம்.

அவரது மகனான டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வருடன், விஜய் சங்கேஸ்வரின் பயணம் எப்படி வெற்றிகரமாக அமைந்தது என்பதையும் விவாதித்திருக்கிறோம்.

கன்னடத்தில் தயாராகி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியாகும் முதல் சுயசரிதைத் திரைப்படம் என்ற கௌரவத்தையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

பாடல் காண……

Related Posts