செய்திக் குறிப்புகள்

ஒரு கோடியில் பிரமாண்ட செட் – வள்ளிமயில் பட ஆச்சரியம்

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்..ஒளிப்பதிவு –  விஜய் சக்ரவர்த்தி, படத்தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார்.

1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தைப் பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகிறது. 

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர்,ஜீவா போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் இரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.

முதல் முறையாக இந்தக் கூட்டணி இணைவதால் இரசிகர்களிடம் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு போன்ற தரமான படைப்புகளைத் தயாரித்து தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராகத் திகழும் தாய் சரவணன்,அவரது நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். 

திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்டப் பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு  இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காக,பழமையான சென்னையைக் கட்டமைக்கும்,  பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சென்னையைத் தொடர்ந்து டெல்லியில் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

Related Posts