சிவி 2 – திரைப்பட விமர்சனம்
பல ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் ஒரு மருத்துவமனைக்குள் சில மாணவ மாணவிகள் செல்கின்றனர்.
பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களுக்குச் சொல்வதற்காக அனைவரும் ஒளிப்பதிவுக் கருவிகளுடன் அதற்குள் செல்கின்றனர். அங்கு நடப்பவற்றை நேரலையாக ஒளிபரப்பும் செய்கின்றனர்.
அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைப் பயத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்கள்.
தேங்காய்சீனிவாசன் பேரன் யோகி, சரண்ராஜ் மகன் தேஜ்,சுவாதிஷா,சந்தோஷ்,கிறிஸ்டின்,காயத்ரி ஆகியோர் மாணவர்களுக்கே உள்ள துடிப்புடன் உள்ளேபோய் அங்கு நடக்கும் அமானுஷ்யங்களால் அலறுவதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
காவல்துறையினராக வரும் தாடிபாலாஜி, கோதண்டம், குமரன் ஆகியோரும் கணினி வல்லுநராக வரும் சாம்ஸும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஏனெனில் படத்தில் அவர்கள் முகங்கள் மட்டுமே தெளிவாகத் தெரிகின்றன.
சஞ்சய்யின் ஒளிப்பதிவு பேய்போலவே பயமுறுத்துகிறது. ஃபைசலின் இசை அதற்குப் பக்கவாத்தியமாக இருக்கிறது.
பேய்க்கதையை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்காக தற்கால யூடியூபர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் எவ்வித விதிமுறைகளையும் கடைபிடிக்க மாட்டார்கள் என்பதையும் அதனால் விளையும் ஆபத்துகளையும் தெளிவாக விளக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.செந்தில்நாதன்.











