நதி – திரைப்பட விமர்சனம்
ஒரே கல்லூரியில் படிக்கும் நடுத்தர வர்க்கப் பையனுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் பணக்காரப் பெண்ணுக்கும் காதல். அதனால் என்னவெல்லாம் நடக்கும்? எனும் அரதப் பழசான கதையில் புதிதான ஒரு இறுதிக்காட்சியைச் சேர்த்திருக்கும் படம் நதி.
நாயகனாக நடித்திருக்கும் சாம்ஜோன்ஸ், நடுத்தர வர்க்க இளைஞன் வேடத்துக்கேற்ப பொருத்தமாக இருக்கிறார்.
காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் இன்னும் முன்னேறவேண்டும்.
நாயகி ஆனந்தி படத்துக்குப் பெரும் பலமாக இருக்கிறார். காதலில் விழும் காட்சிகள், கடைசியில் காட்டும் உறுதி ஆகியன அவருக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றன.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் முனீஸ்காந்த்துக்கு நல்லவேடம். அவரும் அதைப் பொறுப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியின் அப்பா இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகியின் பெரியப்பாவாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் உயர்சாதித் திமிர் மற்றும் அரசியல்வாதிகளின் அழிச்சாட்டியத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
திபுநினன்தாமஸ் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை, பின்னணி இசையில் தாழ்வில்லை.
பழைய கதை என்பதால் நதி ஓடாமல் ஒரேஇடத்தில் தேங்கி நிற்கிறது.











