சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் இப்படிச் செய்வாரா? – வியப்பில் திரையுலகம்

தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படம் ஆகிய இரண்டு படங்களை ஒரேநேரத்தில் இயக்கிவருகிறார் ஷங்கர்.

தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு முடித்து இந்தியன் 2 படப்பிடிப்பு, இந்தியன் 2 படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராம்சரண் படப்பிடிப்பு என்று போய்க்கொண்டிருந்தது.

நடிகர்கள் தேதி உள்ளிட்ட சில விசயங்கள் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நடந்தாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் அப்படியெல்லாம் ஒப்புக்கொள்ளாத இயக்குநர் ஷங்கர் இப்போது அதை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதே வியப்பான செய்தி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிகழ்வு நடக்கிறதாம்.

அது என்னவென்றால்?

இந்தியன் 2 படப்பிடிப்பை இயக்குநர் அறிவழகன் நடத்திக் கொண்டிருக்கிறாராம். ராம்சரண் படத்தில் பாடல்காட்சி படமாவதால் அதை நடன இயக்குநர் நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

இரண்டு படப்பிடிப்புகளிலுமே இயக்குநர் ஷங்கர் இல்லை என்பது யாரும் எதிர்பாராத நிகழ்வு.

அப்படி அவர் விடமாட்டாரே? விட்டுவிட்டு என்ன செய்கிறார்? என்றால், இப்படங்களுக்கு அடுத்து அவர் இயக்கவிருக்கும் வேள்பாரி நாவலைத் தழுவிய படத்துக்காக எழுத்தாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுடன் திரைக்கதை குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்குப் பல வேலைகள் இருக்கும் எனவே அவருக்கு நேரம் கிடைக்கும்போது ஷங்கர் இருந்தாகவேண்டிய நிலை என்பதால் இப்படி நடக்கிறது என்கிறார்கள்.

காலத்துக்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும் என்பதை ஷங்கர் உணர்ந்திருக்கிறார் என்பதன் வெளிப்பாடே இது என்று சொல்கிறார்கள்.

Related Posts