சினிமா செய்திகள்

ஓடிடிக்கு போனது சமுத்திரக்கனி படம்

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகிபாபு,ஆத்மியா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “வெள்ளையானை”.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருக்கிறார்.மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்திருக்கிறார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் ஈ.ராமதாஸ்,
இயக்குநர் மூர்த்தி,இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி,பவா செல்லதுரை,’சாலை ஓரம் ‘ ராஜு, சரண்யா ரவிச்சந்திரன், பத்திரிகையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் முழுமையாகத் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன.

படத்தைப் பார்தத பலரும் மிகவும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் பட வெளியீடு தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.

இதனால், படத்தின் தயாரிப்பாளர் ஓர் அதிரடி முடிவெடுத்து படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியும் விட்டாராம்.

ஏற்கெனவே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருந்தது.

அவர்களே இப்போது சன் நெக்ஸ்ட் மூலம் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட ஒப்புக்கொண்டார்களாம்.

படத்தில் பேசப்பட்டிருக்கும் நல்ல கருத்துகள் மக்களிடம் விரைவாகப் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளர் இம்முடிவை எடுத்ததாகவும், நல்ல படம் என்பதால் அதை விலை கொடுத்து வாங்கி வெளியிட சன் நெக்ஸ்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுவதால் சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Related Posts