September 10, 2025
செய்திக் குறிப்புகள்

சாயம் திரைப்பட இசை வெளீயீட்டு விழா -தொகுப்பு

‘ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்

படிக்கும் மாணவர்கள் மீது சாதிச் சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 11 காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், பி ஆர் ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி..எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல் சர்மா, ஷாஸ்வி பாலா, பாடலாசிரியர்கள் கம்பம் குணாஜி, சொற்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

நிகழ்வில் இயக்குநர் எஸ்/ஏ.சந்திர சேகர் பேசும்போது,

“மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்குப் பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்? என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.பள்ளியையே மூடும் அளவுக்குப் போராட்டம் நடத்துவேன் எனக் கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியைக் குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

எனது படத்தில் நடித்த அபிசரவணன் தற்போது விஜய் விஷ்வா என பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்..விஜய் என்று சொன்னாலே ஒரு அதிர்வு ஏற்படும். பாலிவுட் கதாசிரியர் சலீம் ஜாவேத் தனது கதையின் ஹீரோக்களுக்கு குறிப்பாக அமிதாப்பின் படங்களில் எப்போதுமே விஜய் என்றுதான் ஹீரோவுக்கு பெயர் வைப்பார். அதேபோல நானும் எனது படங்களின் நாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பேன். அதனால் தான் எனது மகனுக்கும் விஜய் என பெயர் வைத்தேன். விஜய் என்றாலே வெற்றி என்றுதான் அர்த்தம் அந்த வெற்றி இவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டும். எனப் பேசினார்.

நாயகன் விஜய் விஷ்வா பேசும்போது,

“அட்டகத்தி, குட்டிப்புலி படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்த பின்னர் மீண்டும் அவர்களைத் தேடி வாய்ப்புக் கேட்கப் போனபோது அங்கே சாதி பார்க்கப்படுவது போல உணர்ந்தேன்.அதனால் சாதி பார்க்காத ஆட்களுடன் சேர்ந்து பணிபுரியவேண்டும் என முடிவெடுத்தேன். இன்று இந்த விழாவுக்கு நிறைய சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தோம்.ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவரின் பிறந்தநாள் என்பதால் அதை வைத்து தாங்களாகவே தொடர்புபடுத்திக்கொண்டு இந்தவிழாவுக்கு வர மறுத்துவிட்டார்கள். நிறையப் படங்கள் சாதியைப் பற்றி வருகிறது.ஆனால் இந்தப்படத்தில் சாதியைப் பற்றியே பேசவேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குநர் ஆர்வி உதயகுமார் பேசும்போது,

“சாதி வேண்டாம் என்றுதான் நானும் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன். பள்ளி விண்ணப்பங்களில் சாதி பற்றியே கேட்கக் கூடது என ஒரு மசோதாவை தாக்கல் செய்துவிட்டால் போதுமே. ஆனால் அதைச் செய்ய முடியாமல் சிலர் தடுக்கிறார்கள். நானும் சின்னக்கவுண்டர் போல சாதிப் பெயரில் படம் எடுத்தவன் தான்.ஆனால் எந்தச் சாதியையும் தூக்கிப் பிடிக்கவில்லை.யாரையும் தாழ்த்தியும் பேசவில்லை.இதுபோன்ற சமூக நோக்கில் எடுக்கப்படும் சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இங்கே பேசிய இயக்குநர் சாய்ரமணி சொன்னதுபோல, கடந்த ஆட்சியில் அம்மா திரையரங்கம் என ஒரு திட்டம் பேசப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த ஆட்சியில் அதை கலைஞர் திரையரங்கம் என்கிற பெயரிலாவது செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிக்கு சிறிய அளவிலான தியேட்டர்களை கட்டித்தர வேண்டும், சிறு பட தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று பேசினார்.

படத்தின் இயக்குநர் அந்தோணிசாமி பேசும்போது,

“எஸ்.ஏ.சி சார் சொன்னதுபோல சினிமாவில் தான் ஜாதி பார்ப்பது இல்லை என்கிற நிலை முன்பு இருந்தது.. ஆனால் இப்போது சினிமாவில் சாதிப் பற்று கொஞ்சமா கொஞ்சமாக ஊடுருவத் தொடங்கியுள்ளது.திரௌபதி படத்தின் இயக்குனரே படத்தின் போஸ்டரில் தன் சாதிக்கொடியை பயன்படுத்தியுள்ளதாகச் சுட்டிக் காட்டி விழாவிற்கு வர மறுத்து விட்டார். இப்போது என்னால் நிறையப் பேச முடியவில்லை.அடுத்தடுத்த மேடைகளில் நிறைய விசயங்களைச் சொல்லப்போகிறேன்”

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts