செய்திக் குறிப்புகள்

ரஜினிக்கு பில்லா ஜீவிக்கு ரெபல் – இயக்குநர் புகழாரம்

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ரெபல்.

இப்படத்தில், கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி.,ஆதித்யா பாஸ்கர்,’கல்லூரி’ வினோத்,ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு இசை’ ஜீ.வி.பிரகாஷ் குமார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படம் வரும் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில்,மார்ச் 11 அன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது…

ரெபெல் திரைப்படம் இயக்குநர் நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அளப்பரியது.இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. அவரைத்திருப்திப்படுத்துவது தான் எங்கள் வேலையாக இருந்தது.தயாரிப்பாளர் ஞானவேல் இங்கு வேலை காரணங்களால் வரமுடியவில்லை.மும்பையில் ஸ்டூடியோ க்ரீன் சார்பில் சில திரைப்படங்கள் ஆரம்பிக்கிறது அதனால் தான் வரமுடியவில்லை.அவருக்கு இந்த வருடம் மிகச் சிறப்பான வருடமாக அமையும். இங்கு வாழ்த்த வந்துள்ள எங்கள் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி.ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல், அவர் ஒரு நிறுவனம் மூலமாக 10க்கும் மேற்ப்பட்ட அறிமுக இயக்குநர்களைத் திரை உலகிற்குத் தந்துள்ளார். அவரளவிற்கு இல்லாவிட்டாலும் அது போல் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்தப்படம் மூலம் நிகேஷ் பெரிய அளவில் சாதிப்பார்.1980 களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப்படம் உருவாகியுள்ளது. ஜீவி பிரகாஷ் அட்டகாசமான ஆக்சன் செய்துள்ளார். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றார்.

இயக்குநர் நிகேஷ் பேசியதாவது….

நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயது தான்,ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார்.10 நாள் ஷூட் செய்து அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இப்படத்தின் அனைத்துப் பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஜீவி பிரகாஷ் அண்ணா என்னை நம்பி இந்தக்கதை கேட்டார்,கேட்டவுடன் தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார். அவருக்கு என் நன்றி. இந்த மொத்தப்படமும் அவர் மீது தான் பயணிக்கிறது. நாயகி மமிதா பைஜு, மிக ஆழமான அழுத்தமான கேரக்டர், ஆனால் அதைப் புரிந்து நடித்த தந்தார் அவருக்கு என் நன்றிகள்.பா.இரஞ்சித் அண்ணா என் படத்தின் பூஜைக்கு வந்தார், இப்போது இங்கு வாழ்த்த வந்துள்ளார் நன்றிகள். கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், என ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். அருண் மிக அற்புதமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்.
உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி என்றார்.

பின்னணி இசைக் கலைஞர் ஓஃப்ரோ பேசியதாவது…

ஜீவி மற்றும் ஞானவேல் சார் இருவருக்கும் நன்றி.அவர்கள் தான் என்னை இப்படத்திற்குள் அழைத்து வந்தார்கள். பா.இரஞ்சித் சார் அறிமுகப்படுத்திய கலெக்டிவ் காஸ்ட்லெஸ் மூலம் தான் நான் அறிமுகமானேன்.அவருக்கு என் நன்றிகள்.இந்தப்படத்தில் 5 மாதம் வேலை பார்த்துள்ளோம்.மிகச்சிறப்பான படைப்பு, உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது…

எனக்கு இந்த வாய்ப்பளித்த இரஞ்சித் சார் மற்றும் இயக்குநர் நிகேஷ் சாருக்கு நன்றி,என்னுடைய குழுவினருக்கு நன்றி, ஜீவி பிரகாஷ் சாருடன் பணி புரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி என்றார்.

கலை இயக்குநர் உதய் குமார் பேசியதாவது…

முதலில் இந்தப் படத்தில் நான் பணிபுரிய முக்கிய காரணம்,தயாரிப்பாளர் சார் அவருக்கு எனது நன்றி.இந்தப் படத்தின் கதை 1980 இல் நடப்பது போல் இருந்தது, அந்தக் காலகட்டத்தைத் திரையில் கொண்டுவருவது எங்களுக்கு அது சவாலாக இருந்தது.ஒவ்வொரு ஃபிரேமும் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளோம். இயக்குநர் நிகேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள், கண்டிப்பாகப் படம் உங்களுக்கு ஒரு புதுமையான உணர்வைக் கொடுக்கும், நன்றி என்றார்.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது…

இந்தப்படத்தின் கதை 2 1/2 வருடம் முன்னாடி முடிவானது.இந்த 2 1/2 வருடங்களில் இப்படத்திற்காகப் போராடிப் படத்தை அருமையாகக் கொண்டு வந்துள்ள இயக்குநர் நிகேஷ் அவர்களுக்கு நன்றி. ஜீவி அண்ணா அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அவர் நேரில் தம்பி போல் என்னைப் பார்த்துக்கொண்டார்.இரஞ்சித் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.எங்களை வாழ்த்த வந்த அவருக்கு நன்றி.மமிதா பைஜு இன்னும் நிறைய வெற்றிப்படங்கள் தர வாழ்த்துகள். நிறைய மலையாள நண்பர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.படம் மிக அருமையாக வந்துள்ளது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி என்றார்.

சரிகம நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது…

ரெபெல் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு மக்களிடம் உருவாகியுள்ளது, இப்படத்தின் விழாவில் நாங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது,பாடல்கள் எல்லாம் மிக அருமையாக வந்துள்ளது.இசையமைப்பாளருக்கும் இயக்குநருக்கும் எனது வாழ்த்துகள்.ஒட்டு மொத்தப் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள் நன்றி என்றார்.

நடிகர் கல்லூரி வினோத் பேசியதாவது….

ஜீவி பிரகாஷ் சாருக்கு வணக்கம்,இந்தப் படத்தில் நான்தான் இறுதியாகக் கலந்து கொண்ட கதாபாத்திரம்,இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம்,இரஞ்சித் அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும்,அவரது படம் போல இந்தப் படமும் ஒரு முக்கியமான அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது,அது மட்டுமில்லை அதில் இரசிக்கும்படி பாடல்கள் சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளது.இயக்குநர் நிகேஷ் சாருக்கு நன்றி,ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் நன்றி.ஜீவி பிரகாஷ் சாரின் இரசிகன் நான்.வெயில் படத்தின் பாடல்கள் முதல் இன்று வரை அவரது பாடல்களுக்கு நான் மிகப்பெரிய இரசிகன்.அவருடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் – நடிகர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது…

முதல் படம் ஒரு அரசியல்மயப்படுத்தப்பட்ட படமாக, பொதுவுடைமைக் கருத்தைத் தைரியமாகச் சொல்லும் படமாக இயக்கியிருக்கிறார் நிகேஷ்.முதல் படத்தில் இதைச் செய்வது மிகப்பெரிய விசயம். தமிழை முதல் படத்தில் இவ்வளவு தைரியமாகப் பேசி எடுப்பது பெரிய விசயம். நிறைய ஹீரோக்கள் இதைச் செய்யப் பயந்திருப்பார்கள்.ஆனால் மிகத் தைரியமாகச் செய்துள்ள ஜீவிக்கு நன்றி.அவர் சமூகத்தில் சின்னச் சின்ன விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவரால் மட்டும் தான் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும். இந்தப்படம் பார்க்கும் போது எனக்கு நாயகன் தான் ஞாபகம் வந்தது.அந்தப்படமும் மும்பையில் தமிழ் கஷ்டங்களைப் பேசும் படம்.ரஜினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இது பெயர் சொல்லும் ஆக்சன் படமாக இருக்கும்.இரஞ்சித் எனக்கு மிகப்பிடித்த இயக்குநர். தமிழ் சினிமாவில் ஆர்.பி.சௌத்திரிக்குப் பிறகு அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் இரஞ்சித் அவருக்கு என் நன்றி. இந்தப்படம் தான் உண்மையான மஞ்ஞும்மள் பாய்ஸ்.தமிழ்ப் பசங்க கேரளா போவது தான் கதை.ஒரு அருமையான போராளிப்படம். இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் நன்றி என்றார்.

நாயகி மமிதா பைஜு பேசியதாவது…

இது எனது முதல் தமிழ்ப்படம்.எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான படம்.ஜீவி பிரகாஷ் சார் அருமையான கோ ஸ்டார்.எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். எல்லோரும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளனர்.இந்தப்படம் அருமையாக வந்துள்ளது, தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…

இந்தப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்தேன்,முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் மிரட்டி விட்டார். ஒரு போராளிக்கதை. அதைத் தனித்த கண்ணோட்டத்தில், பார்க்கும் திறமையுடன் இருக்கக்கூடியவர்,ஆனால் முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ். இது தெறிக்கும் கமர்ஷியல் படம்.ஜீவி பிரகாஷ் சார் முழுக்க ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கிறார்.படத்தில் 200 பேரை அடிக்கிறார்.ஆனால் அதை அத்தனை நம்பும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.அந்தக்காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கும்.ஞானவேல் சாரின் நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது.இடையில் சில வருடங்கள் அவருக்குப் பல கஷ்டங்கள் இருந்தன, அதையெல்லாம் தாண்டி இந்த வருடம் அவருக்கு மிகச் சிறப்பாக இருக்கும்.இப்படம் மூலம் ஒரு அருமையான புதுமுக இயக்குநர் கிடைத்துள்ளார்.ஜீவியுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் செய்கிறேன்.இரண்டுமே அட்டகாசமாக வந்துள்ளன.பா.இரஞ்சித் சார் வந்துள்ளார். அவரின் சமீபத்திய தயாரிப்பான ஜே பேபி படத்தை நான் தான் ரிலீஸ் பண்ணியிருக்கிறேன். ஒரு படத்தில் புதுமுகங்கள் பெயர் பெற வேண்டும் என்பதற்காக, உழைக்கும் அவர் பண்பு வியக்கவைத்தது.தொடர்ந்து புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். ரெபல் படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது…

ரெபல் படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் உண்மையான ரெபல் பா.இரஞ்சித் பற்றிப் பேச நினைக்கிறேன், உண்மையில் புதிய முகங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவரது இந்தப் புரட்சி பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியது.அவரை சரோஜா படத்தில் உதவி இயக்குநராகப் பார்த்தேன்.இன்று அவர் பல இயக்குநர்களை உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,அவர் மேன்மேலும் வளர எனது வாழ்த்துகள்,தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்தப் பட வெற்றியின் மூலம் அடுத்த கட்டத்திற்குப் போவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை,இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பொருளையும் வெற்றியையும் ஈட்டித் தரும்.இந்தப் படம் 80 கால கட்டங்களில் நடப்பது போலப் படமாக்கப்பட்டுள்ளது.ஒட்டு மொத்தப் படக்குழுவினரின் உழைப்பு படத்தின் இந்த டிரெய்லரில் தெரிந்து விட்டது,படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் நன்றி என்றார்.

இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது…

ரெபெல் பட மேடையா? என்னைப் புகழும் மேடையா? எனத் தெரியவில்லை,இந்தப்பாராட்டுகள் மூலம் நான் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன் என்று நினைக்கிறேன்.இப்படத்தின் விஷுவல்,டிரெய்லர்,எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது.முல்லைப் பெரியாறு பகுதியில்,இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில், இந்தக்கதையை செட் செய்துள்ளார்கள்.வாழ்த்துகள்.ஜீவியை எனக்கு தங்கலான் மூலமாகத் தான் தெரியும்,எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள்,ஆனால் நேரில் பழகியபிறகு தான் தெரிந்தது,மிக மிக நல்ல மனது கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும்,நிறையப் பேருக்கு நல்லது செய்ய வேண்டும்.தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார்.என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார்.இந்தப்படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள்.எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.இன்றைய சினிமாவில் சின்னப் படங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.இந்த நிலையில் தான், சக்திபிலிம் சக்திவேலன் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.அவர் இந்த வேலையை நிறையச் செய்ய வேண்டும். நிகேஷ் இப்படத்தில் இருமொழியைப்பிரச்சனையைக் கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்றார்.

நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…

இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.இரஞ்சித் சாருடன் பணியாற்றும் தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது.அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன்.அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.சக்தி அண்ணா ரெபல் படம் பார்த்துவிட்டார்,அதனால் தான் இவ்வளவு சந்தோஷமாகப் பேசுகிறார்.இந்தப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.தமிழ் பற்றிப் பேசும் கதை,இது என்னிடம் வந்தபோது சந்தோசமாக இருந்தது,இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார்.மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச் செய்துள்ளார். இந்தப்படத்தின் மையமே ஆதித்யா தான். அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால் தான், இந்தப்படமே சரியாக வந்துள்ளது.அட்டகாசமாகச் செய்துள்ளான். நடிகர் வினோத் போனில் பேச ஆரம்பித்தால் அரை மணிநேரம் ஆனாலும் வைக்க மாட்டான், நல்ல பையன். நன்றாக நடித்துள்ளான்.மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன்,அவர் தான் டார்லிங்க் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார்.அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும்.நிகேஷ் படம் பார்த்துவிட்டு என் தயாரிப்பில் படம் செய்ய அட்வான்ஸ் தந்துள்ளேன்.அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார்.ஓஃப்ரோ மிகச்சிறப்பான பின்னணி இசை தந்துள்ளார்.சித்துக்குமார் கேரளா சாங் செய்துள்ளார்.அதை நான் தான் டிரெய்லரில் வைக்கச் சொன்னேன்.வெங்கடேஷ் என்னிடம் எல்லாம் பேச மாட்டான் எப்போதும் பெண்களுடன் தான் பேசுவான்.நல்ல நடிகன்.எல்லோருமே மிக அர்ப்பணிப்போடு உழைக்கும் போது அந்தப்படம் சிறப்பாக வரும்.மமிதா பைஜு அழகாக தன் கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார்.ஆண்டனி அண்ணா லவ் ஸ்டோரி சொல்வார் பிரமிப்பாக இருக்கும்.ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts