துபாயில் மகாராஜா படக்குழு – நிகழ்ச்சிகள் விவரம்

துபாயின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதற்கு முன் கமலின் ‘விக்ரம்’ படத்தின் முன்னோட்டம் அங்கு வெளியானது.இரண்டாவது தமிழ்ப் படம் மகாராஜா. இவ்விரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான டபிள்யூ ஐ டி (W.I.T) (Where in Tamilnadu) நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.
உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமான ‘மகாராஜா’ முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் விட் ஈவன்ட்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனங்கள் ஏற்பாட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் சுதன், ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி, ஒரு காலத்தில் நான் இந்த நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்க வந்தேன். அதே ஊரில் இன்று பாராட்டு கிடைக்கிறது என வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
முன்னோட்ட வெளியீட்டைத் தொடர்ந்து துபாய் லூலூ சிலிகான் சென்டிரல் மால் வளாகத்தில் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதிக்கு, துபாய் பொருளாதாரத் துறையின் முன்னாள் இயக்குநரும், தற்போதைய ஆலோசகருமான வலீத் அப்துல்மாலிக் முகம்மது அஹ்லி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். ஏற்றம் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தினேஷ்குமார் குருசுவாமி, கே.ஆர்.ஜி குழும நிறுவனங்களின் தலைவர் கண்ணன் ரவி, லைன் முதலீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிராஜ், ஃபர்தான் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேலாளர் முருகன் செல்லையா, துபாய் பெண்கள் கல்லூரியின் பேராசிரியை லக்ஷ்மி பிரியா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகள் மூலம் மகாராஜா படத்துக்கான எதிர்பார்ப்பு வெளிநாடுகளிலும் அதிகரித்துள்ளது.