சென்னை 28 அட்டகத்தி போல் இந்தப்படமும் இருக்கும் – புதுஇயக்குநர் ஆனந்த் நம்பிக்கை

சின்னச் சின்ன வேடங்களில் நடித்த,ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த ’மீசையை முறுக்கு’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்து கவனம் பெற்றவர் ஆனந்த்.
அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.இந்தப்படத்தின் இயக்குநரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்குகிறார்.
இப்படத்தில், ஆனந்த் கதையின் மையக்கதாபாத்திரமாக நடித்திருந்தாலும், ஆர்ஜே விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா, கே.பி.ஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் லீலா, குமரவேல், விஷாலினி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்திருக்க, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆனந்த் கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஆனந்த் மற்றும் ராஜேஷ்.வி ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். தமிழ்ச்செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, இராகுல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, இயக்குநர் மற்றும் நடிகர் ஆனந்த், இசையமைப்பாளர் ஏ.எச்.காசிப் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் கூறியதாவது….
ஊடகத்துறை சம்பந்தமாகப் படித்து அத்துறையில் பல தளங்களில் பணியாற்றினேன். பிறகு என் நண்பர் வெங்கட் பிரபு ஆரம்பித்த பிளாக் டிக்கெட் நிறுவனத்தில் பணியாற்றினேன்.அந்த சமயத்தில் தான் என்னைச் சந்தித்து இந்தப்படத்தில் நடிக்கவேண்டுமென ஆனந்த் சொன்னார்.நான் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். திரைப்படத்தில் பெரிய கதாபாத்திரம் என்பது எனக்குப் புதிது. அதனால் தயங்கினேன். அதே சமயம்,இந்தக் கதை எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.என் வாழ்க்கைக்கு நெருக்கமான கதையாக இருந்தது.
எனவே,இந்தப்படத்தை நானே தயாரிப்பது என்று முடிவு செய்தேன்.ப்ளாக் டிக்கெட் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் என்க்கு உதவியாக இருந்தது.படம் நன்றாக வந்திருக்கிறது.சினிமாதனமாக இல்லாமல் எதார்த்த வாழ்வை எதிரொலிக்கும் இந்தப்படத்தைப் பார்ப்போர் அனைவரும் படத்தோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம்
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் ஆர்ஜே விஜய் கூறியதாவது….
நான் இந்தப் படத்தில் நடித்தது மட்டுமின்றி இரண்டு பாடல்களும் எழுதியிருக்கிறேன். ஒரு பாடலை தனுஷ் சாரும், மற்றொன்றை ஜி.வி.பிரகாஷ் சாரும் பாடியிருக்கிறார்கள். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.முதலில், பாடல் எழுதுவதற்காகத் தான் இயக்குநர் என்னிடம் வந்தார்.கதை தெரிந்த பிறகு, நானும் இதில் நடிக்கலாமே அதற்கான வாய்ப்பு இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால், அதை எப்படிக் கேட்பது என்று தயங்கினேன். அதேநேரம், இயக்குநருக்கும் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.தொடக்க தயக்கங்களுக்குப் பின் ஒரு வழியாக இருவரும் எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி விட்டோம்.இப்படித் தான் இந்தப் படத்தில் நான் நடித்தேன். இந்தக்கதை எல்லோருடைய வாழ்விலும் நடந்திருக்கும். ஆனந்த் அதை மிக அழகாக எழுதியிருக்கிறார்.இந்தப் படம் அனைத்து வயதினருக்குமான படமாக அமைந்திருக்கிறது என்றார்.
இசையமைப்பாளர் ஏ.எச்.காசிப் கூறியதாவது…
’காற்றின் மொழி’ படத்தில் பணியாற்றிய பிறகு இந்தக் கதை என்னிடம் வந்தது.ஆனந்த் கதை சொன்ன போதே நான் இசை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன். நான் ஏ.ஆர்.ரகுமான் சாரிடம் பணியாற்றி வருகிறேன். அதனால், இந்தக் கதை பற்றி அவரிடம் சொல்லி, “முஸ்தபா…” பாடலைப் பயன்படுத்த உள்ளோம் என்பதைச் சொன்னேன். அவர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.அந்தப் பாடலின் உரிமையை வைத்திருந்த நிறுவனத்திடம் உரிமை பெற்று அந்தப் பாடலைப் பயன்படுத்தியிருக்கிறோம். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. படத்திற்கான அடையாளமாகவும் மாறியிருக்கிறது என்றார்.
நடிகர் தேவ் கூறியதாவது…
திரைப்படத் தயாரிப்பில் பணியாற்றி வந்தாலும் நடிப்பதில் தான் எனக்கு ஆர்வம். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். இந்தக்கதையில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
யூடியுப் பிரபலம் வில்ஸ்பேட் கூறியதாவது…
நான் மொபைல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவேன். எனக்கும் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. செல்போனியில் வீடியோ எடுத்து வெளியிடும் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் யோசித்தேன். அப்போது தான் ஆனந்த்திடம் இருந்து அழைப்பு வந்தது. உங்க வீடியோ நன்றாக இருக்கிறது, இப்படி ஒரு படம் பண்ணப் போறோம், உங்களுக்கு ஒரு வேடம் இருக்கிறது என்று அழைத்தார். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதில் நடிக்கும் போதே நாங்கள் நிஜமான நண்பர்களாகத் தான் இருந்தோம் என்றார்.
இயக்குநரும் நடிகருமான ஆனந்த் கூறியதாவது….
பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். மீசையை முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தது எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. நாளைய இயக்குநர்கள் ஐந்தாவது சீசனில் கலந்துக்கொண்டு இறுதிப் போட்டி வரை பயணித்திருக்கிறேன். நண்பன் என்ற குறும்படத்திற்காக விகடன் விருது பெற்றேன். பிறகு என் வாழ்க்கையில் ஒரு தரமான சம்பவம் நடந்தது. என் வாழ்க்கையில் மட்டும் அல்ல. இது பலரது வாழ்க்கையில் நடந்திருக்கும். என் நண்பனுக்கு நடந்த அந்த சம்பவம் பற்றி எழுத ஆரம்பித்தேன். அது தான் இந்தக் கதை. இந்தக்கதை அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும்.கேட்டவர்கள் அனைவரும்,இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல இருக்கிறதே என்று சொன்னார்கள்.
ஒரு நல்ல கதை தனக்கானதை தானாகவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள், சென்னை 600028 போன்ற படங்களுக்கு அப்படித் தான் நடந்ததாம். அதுபோல தான் இந்தப் படத்திற்கான அனைத்தும் தாமாகவே நடந்தது. வெங்கட் பிரபு சாரிடம் கதை சொன்ன போது, ‘சென்னை 600028’ மூன்றாம் பாகத்திற்கான ஐடியாவாக இருக்கே என்றார்.அதனாலேயே தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை அவர் வழங்குகிறார்.
நண்பர்களுக்கான படம் என்பதால் இளைஞர்களுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். 60 வயதுடையவர்கள் கூட இந்தக் கதையுடன் தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்வார்கள், அவர்கள் வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கும். அதனால், இந்தக் கதை அனைத்து வயதினரையும் நிச்சயம் பாதிக்கும். நீங்கள் பலரைப் பார்த்திருப்பீர்கள்.அவர்களுடைய பேச்சைக் கேட்டிருப்பீர்கள். நான் பேசுவது கொஞ்சம் அதிகம் என்று உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் படத்தைப் பார்க்கும் போது நான் பேசியது அனைத்தும் சரி என்று உங்களுக்குப் புரியும்.‘சென்னை 600028’, ‘அட்ட கத்தி’ போன்ற படங்கள் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோல் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.