சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் – கடைசிநேரத்தில் இணைந்த கமல்

மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.

முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இரண்டாம்பாகத்தை சனவரி 14,2023 இல் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவையும், தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாள்ராகவும் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது.
1950 களில் தொடராக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஒரு சாகசப் பயணம், சோழப் பேரரசிற்குள் நடக்கும் பிரிவு, அதிகாரப் போராட்டங்கள் ஆகியனவற்றைத் தாண்டி எதிரிகள் வினையூக்கிகளாக செயல்படுவதை எதிர்கொண்டு பொன்னியின் செல்வன் (காவேரி நதியின் மகன்) ஒரு பொற்காலத்தைக் கொண்டு வருவதற்காகப் போராடுவதுதான் கதை.

இராச ராச சோழன் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பேரரசர்களில் ஒருவராக ஆவதற்கு முன்பு இருந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நாவலை சில மணி நேரங்களில் படமாக்குவது மிகக்கடினம். அதனால் இந்தப்படத்தின் கதையை குரல்மூலம் எடுத்துச் சொல்லித்தான் திரைக்கதையை நகர்த்திச் செல்லவேண்டும்.

இதற்காக, நடிகர் கமலை அணுகியிருக்கிறார் மணிரத்னம். அவரும் ஒப்புக்கொண்டு படம் நெடுக கதையைச் சொல்லியிருக்கிறாராம். இதற்கான குரல்பதிவை முடித்துக் கொடுத்துவிட்டாராம் கமல்.

ஏற்கெனவே ஏராள நடிகர்களைக் கொண்டிருக்கும் இந்தப்படத்துக்குக் குரல் கொடுத்ததன் மூலம் கமலும் இணைந்திருக்கிறார்.

Related Posts