செய்திக் குறிப்புகள்

ஜமா படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டது எப்படி? – புது இயக்குநர் பேட்டி

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இயக்குநர் பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் (Learn & Teach Production) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

நாடகங்களில், ஆண் கலைஞர்கள் பெண் வேடமிடும்போது அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது.

இத்திரைப்படத்தில் நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஜமா’ திரைப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன வெளியாகி வரவேற்புப் பெற்றுள்ளன.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படம் குறித்து படத்திம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் சேத்தன் கூறியதாவது….

’விடுதலை’ படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இந்தப் படத்தில் நடிக்க வைக்க என்னை அணுகினார்கள்.இயக்குநர் என்னிடம் கதை சொல்வதற்கு முன்பு, இந்தக் கதை பற்றி பைலட் வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பினார். அந்த வீடியோ பார்த்ததும் இது சாதாரண வேடம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால் தான் கூத்து வாத்தியாரிடம் முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.அதோடு, படப்பிடிப்பு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பாக படப்பிடிப்பு நடக்கும் கிராமத்திற்குச் சென்று, தெருக்கூத்துக் கலைஞர்களுடன் பழகி சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். நிச்சயமாக இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கூறியதாவது….

‘கூழாங்கல்’ போன்று ‘ஜமா’ படமும் மக்களுக்கான படமாக அமைந்திருக்கிறது. நயன்தாரா மூலம் முந்தைய படத்திற்கு ஒரு அடையாளம் கிடைத்தது. அதுபோல் இந்தப் படத்தை மற்றவர்களிடம் கொடுக்க நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களே நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். ‘கூழாங்கல்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முயற்சித்தோம், ஆனால் அது முடியாமல் போய்விட்டது.இந்தப் படத்தை நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். காரணம், இந்தப் படத்தை மக்கள் பார்க்க வேண்டும், இந்தப் படம் மக்களைச் சென்றடைந்து, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். படமும் அதற்கு ஏற்றவாறு இருக்கிறது என்றார்.

jama team

jama team

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் பாரி இளவழகனுடன் ஓர் உரையாடல்…

1. ஜமா என்றால் என்ன?

ஜமா என்பது தெருக்கூத்துக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல்.இப்படத்தின் கதை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தெருக்கூத்து ஜமாவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து நகர்கிறது என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம்.

2. இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

தெருக்கூத்துக் கலை பின்னணியில் வாழ்ந்தவன் நான்.எனது ஊரில், எனது உறவினர்கள் பலர் இன்னமும் தெருக்கூத்துக் கலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் படம் இயக்கும் நேரத்தில் நாம் பார்த்து பழக்கப்பட்ட நமது கதையைச் சொல்லலாம் என்று தோன்றியது. அதனால் தான் இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்.

3. இதில் பேசப்பட்டிருக்கும் விசயங்கள் பற்றி..?

திரைப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகளில் தெருக்கூத்துக் கலைஞர்கள் பற்றித் தவறான தகவல்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக அவர்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அந்தக் கலை அழிந்து வருவதாகவும் காட்டுகிறார்கள். அது உண்மை அல்ல. அவர்கள் நன்றாகவும், வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால், கலைப்படைப்புகளில் அந்தக்கலை பற்றித் தவறான உதாரணங்களை சொல்கிறார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். தெருக்கூத்துக் கலைஞர்கள் பற்றி சொல்லப்பட வேண்டிய விசயத்தைத் தான் இதில் சொல்லியிருக்கிறேன். ஆண் கலைஞர்கள் பெண் வேடம் போடும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம். அவர்களுடைய சொந்த ஊரிலேயே அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள். கலை நிகழ்ச்சிகாக வெளியூர் சென்றாலும் அங்கேயும் அவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். இதனால், பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய இத்தகைய சிக்கலைத்தான் எதார்த்தமாகவும், திரை மொழியிலும் சொல்லியிருக்கிறேன்.

4.இப்படத்தை இயக்கியதோடு நடித்துமிருப்பது பற்றி..?

நான் நடிகனாக வேண்டும் என்று தான் முயன்று கொண்டிருந்தேன். பல வருடங்களாக சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தேன், அதே சமயம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்தேன். இந்தக் கதையை எழுதி முடித்த பிறகு என் நண்பர்களைக் கூட இயக்குநராக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கலாம். ஆனால், நான் பார்த்த ஒரு வாழ்க்கையை, நானே இயக்கினால் தான் சரியாக வரும் என்று தோன்றியது. அதனால் தான் இயக்கவும் செய்தேன்.

5.இப்படம் தொடங்கியது குறித்து..?

‘கூழாங்கல்’ போன்ற ஒரு படத்தைப் புரிந்து தயாரித்திருப்பவர்கள், என் படத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் அவர்களை நான் அணுகினேன்.அவர்களுக்கு சினிமா ஞானம் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது.நான் இந்தக் கதையைச் சொன்ன போது முழுமையாகப் புரிந்து கொண்டார்கள்.அப்போதிருந்து,இந்தக் கதையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற என் முயற்சிக்கு முழுமையான சுதந்திரமும் ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறார்கள்.

6.சேத்தன் போன்ற அனுபவமிக்க நடிகரை இயக்கியது பற்றி..?

சேத்தன் சார் ஜமாவின் வாத்தியாராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்குச் சரியாக இருப்பார் என்று என் தந்தைதான் சொன்னார்.அவரிடம் நான் இயக்கிய பைலட் வீடியோ ஒன்றைக் காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் தெரிவித்ததோடு, கூத்து வாத்தியாரிடம் சுமார் 5 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார்.இப்போது படத்தைப் பார்க்கும் போது, இந்த வேடத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் அது சரியாக இருந்திருக்காது என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

7.இளையராஜா?

இப்போதைக்கு தெருக்கூத்துக் கலை மற்றும் கலைஞர்களின் வாழ்வியல் படத்தைப் புரிந்துகொண்டு அதற்கான இசையைக் கொடுக்க கூடியவர் இளையராஜா சார் மட்டும் தான். அதனால் தான் அவர் இசையமைக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை அணுகும் போது நான் எடுத்த பைலட் வீடியோவை காண்பித்தேன். அவர் அதைப் பார்த்துவிட்டு உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.நான் யார்? யாரிடம் பணியாற்றினேன்? என்று எதையும் கேட்கவில்லை.இந்தப் படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து பணியாற்றத் தொடங்கிவிட்டார். படத்தின் இறுதியில் இடம்பெறக் கூடிய ஒரு பாடலை சினிமா பாணியில் எடுக்காமல், தெருக்கூத்து பாணியில் எடுக்கலாம் என்று சொன்னதோடு,அதில், வழக்கமான இசைக்கலைஞர்கள் அல்லாமல், தெருக்கூத்துக் கலைஞர்களையே பயன்படுத்தினால் தான் நன்றாக இருக்கும் என்று கூறி அவர்கள் மூலமாகவே பாடலை ஒலிப்பதிவு செய்தார்.

8.இந்தப்படத்தின் மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பெண் வேடம் போடும் ஆண்களுக்கு ஜமாவின் எந்தவித அங்கீகாரமும் இருக்காது.அவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். சொல்லப் போனால் அவர்களால் இறுதிவரை வாத்தியார் ஆக முடியாது என்ற நிலை தான் இருக்கிறது.அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சி தான் இந்தப் படம்.இந்தச் சிக்கல் பற்றிப் பேசினாலும் அவற்றை ஒரு ஜனரஞ்சகமான கதையோடும் மக்கள் எதிர்பார்க்கும் கமர்ஷியல் அம்சங்களோடும் சொல்லியிருக்கிறோம்.

Related Posts