செய்திக் குறிப்புகள்

எனக்கு இரண்டரை கோடி இலாபம் – ஜெய் ஆகாஷ் வெளிப்படை

ஜெய்ஆகாஷ் நாயகனாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார்.அட்சயாராய்,
ஏ.சி.பி.இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.பால்பாண்டி. ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார்.

எம் ஜி.மணிகண்டன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படம் சமீபத்தில் திரையரங்குகளிலும்,ஏ க்யூப் மூவிஸ் செயலியில் (A Cube movies App) வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னையில் ஜெய் விஜயம் படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் அன்புச் செல்வன்,கில்டு சங்கத்தலைவர் ஜாகுவார் தங்கம்,
ஐ ஜே கே கட்சி துணைத்தலைவர் ஆனந்தமுருகன், நடிகர்கள் பிர்லா போஸ், காதல் சுகுமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் ஜெய்ஆகாஷ் பேசியதாவது….

என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்விஜயம் படம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பத்திரிகையாளர்கள், மீடியா, ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை முதலில் ஏ கியூப் மூவிஸ் செயலியில் வெளியிட்டேன். எனக்கு உலகம் முழுவதும் 3 இலட்சம் இரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்தபோது எனக்குக் கிடைத்த இரசிகர்களும் ஜீ டிவியில் நீ தானே என் பொன் வசந்தம் சீரியலில் நடித்தபோது ஆண்கள், பெண்கள் என இலட்சக்கணக்கில் இரசிகர்கள் கிடைத்தனர்.அனைவரும் என்னுடைய இரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.நான் ஏ கியூப் செயலியில் படம் வெளியிட்டால் அந்தப்படத்தை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து உடனே பார்த்து பாசிடிவ் கமெண்ட் பகிர்வார்கள். அப்படித்தான் ஜெய் விஜயம் படத்துக்குப் பாராட்டு குவிந்தது.அதைப்பார்த்து விட்டுத்தான் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள் என்று பலர் கூறினார்கள். சிறு முதலீட்டு சங்கம் எனக்கு தியேட்டரில் படத்தை வெளியிட உதவியது. சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. தியேட்டரில் எனக்கு இலாபம் கிடைக்கவில்லை. ஆனால் என்னுடைய ஏ கியூப் செயலியில் படத்தை ரிலீஸ் செய்ததில் இரண்டரை கோடி சம்பாதித்துவிட்டேன். இதிலேயே எனக்கு பட்ஜெட்டை விட இரு மடங்கு இலாபம் கிடைத்துவிட்டது.
தியேட்டரில் சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய மறுக்கிறார்கள். இப்போது தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது. சினிமாவை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தை மக்களிடம்.கொண்டு போய்ச் சேர்த்தால் போதும். படம் நன்றாக இருந்தால் அவர்கள் செயலியில் டவுன்லோட் செய்து பார்க்கத் தவறுவதில்லை. இனி சினிமா தியேட்டர்களில் பொங்கல், தீபாவளிக்கு மட்டுமே பெரிய படங்கள் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை வரும். அது நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் இல்லாவிட்டால் பார்க்க மாட்டார்கள்.
ஜெய் விஜயம் படத்தை இயக்கி தயாரித்து நடித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடித்த படங்களில் எனக்கு வெற்றிப் படமாக ஜெய் விஜயம் அமைந்தது. அடுத்து அமைச்சர் ரிட்டர்ன் என்ற படத்தில் நடித்திருக்கிறேன்.அதேபோல் மாமரம் படத்திலும் நடித்திருக்கிறேன்.இந்த இரண்டு படங்களுமே பெரிய பட்ஜெட் படம்.அமைச்சர் ரிட்டர்ன் படத்தை நானே இயக்கி இருக்கிறேன்.தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் இயக்கினேன்.கமர்ஷியல் படமாக நன்றாக வந்திருக்கிறது. இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. ஜெய் விஜயம் படத்தைப் பொறுத்த வரை பத்திரிகையாளர்களுக்கு
சிறப்புக் காட்சி திரையிட்ட பிறகு அதற்கு அவர்கள் பெரும்பாலும் பாசிடிவான விமர்சனங்கள் தந்தனர். படத்தின் வெற்றிக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது.டிரெண்டிங் சினிமாஸ் நவ் வெப் சைட்டில் இதன் விமர்சனம் வெளியாகி என் பார்வைக்கு முதலாவதாக வந்தது.அந்த விமர்சனம் படத்தை நன்றாக கூர்ந்து கவனித்து எழுதப்பட்டிருந்தது.நான் கிளிசரின் போடாமல் கண்ணீர் விட்டு அழுத நடித்த காட்சியைப் பாராட்டியதுடன் படத்தில் புகைமூட்டம் போன்ற ஒரு கதாபாத்திரம் வரும் அது ஏன் அப்படி படமாக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள். நான் என்னவெல்லாம் உணர்ந்து படத்தை எடுத்தேனோ அந்த உணர்வு முழுவதும் அந்த விமர்சனத்தில் இருந்தது.மேலும் ஜெய் விஜயம்,ஜெய் ஆகாஷுக்கு ரீ என்ட்ரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த வாக்குபலித்து விட்டது. தற்போது 4 வெளிப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. வெவ்வேறு இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.

இனி நான் படங்கள் இயக்கப் போவதில்லை. முழுக்க நடிப்பில் கவனம் செலுத்த உள்ளேன்.

ஜெய் விஜயம் படத்தை தமிழ் யோகி, தமிழ் ராக்கர்ஸ் போன்றவற்றில் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து வெளியிட்டிருந்தார்கள். அது எனக்குக் கோபத்தை உண்டாக்கியது. ஆனால் என் நண்பர் கூறும்போது “உன் படத்தை இரசிகர்களும் மக்களும் பார்க்க விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்ற திருட்டு இணையதளத்திலும் படத்தைத் திருடி போட்டிருக்கி றார்கள். இது சினிமாவில் உனக்குக் கிடைத்த வெற்றி” என்றார். அதைக்கேட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.
தமிழில் என் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் என் நடிப்பில் நிறைய சூப்பர் ஹிட் படங்கள் வந்திருக்கி ன்றன. இந்தியில் என் படங்கள் டப்பிங் ஆகி வரவேற்பு பெறுகிறது.

எல்லோரும் இங்கு வாழ்த்தும் போது நடிகர் ஜெய்சங்கர் போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய் ஆகாஷ் படம் வெளிவர வேண்டும் என்றார்கள். அந்த ஆசை எனக்கும் உள்ளது. நிறையப் படங்களில் நான் நடிப்பேன். என் மீது அன்பும் ஆதரவும் காட்டும் இரசிகர்கள், இரசிகைகள் அனைவருக்கும் நன்றி.
ஜெய் விஜயம் பட வெற்றிக்குக் காரணம் இரசிகர்களும் பத்திரிகையாளர்களும் தான்.

இவ்வாறு ஜெய் ஆகாஷ் பேசினார்.

முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவுதீன் பேசும்போது…….

நான் விருப்ப ஓய்வுதான் பெற்றேன். நீதிபதிகளுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். கோர்ட் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து வழக்கு கோப்புகளைப் பார்க்க வேண்டி இருக்கும்.இதனால் டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும் சற்று இளைப்பாற சினிமாவில் வரும் காமெடி காட்சிகள் பார்த்து ரிலாக்ஸ் ஆவோம். திரையில்தான் நாங்கள் நடிகர்களைப் பார்ப்போம். நேரில் பார்க்க முடியாது. இந்நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றேன். அப்போது நடிகர் ஜெய்ஆகாஷ் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் நாள் முழுவதும் நிகழ்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் இருவரும் அங்கிருந்தோம்.அப்போதுதான் எனக்கு ஜெய்ஆகாஷ் நண்பர் ஆனார்.அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது நல்ல உள்ளத்தை அறிந்து கொண்டேன். அவர் மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகள் பற்றியும் தெரிய வந்தது.அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார். அந்த நட்பில்தான் ஜெய்விஜயம் விழாவில் கலந்து கொண்டு படத்தில் பணியாற்றியவர்களுக்கு வெற்றி கேடயம் வழங்க வேண்டும் என்றார். அதை என்னால் மறுக்க முடியவில்லை. அந்த நட்புக்காக இந்த விழாவில் கலந்து கொள்ளவந்தேன். இதுவரை சினிமா விழா எதிலும் நான் கலந்து கொண்டதில்லை. இது தான் நான் கலந்து கொண்ட முதல் சினிமா விழா. இப்படத்தில் சிறப்பாக நடித்த ஜெய்ஆகாஷ் உள்ளிட்டவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் அன்புச் செல்வன் பேசும்போது…..

ஜெய்விஜயம் பற்றி நான் ஏற்கனவே நிறையப் பேசி இருக்கிறேன்.இன்றைக்கு ஜெய்ஆகாஷ் பற்றி மட்டும் பேசுகிறேன்.முதலில் அவர் நல்ல மனிதர்,சினிமாவில் கடின உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். அவர் வருடத்துக்கு 3 படங்களோடு நிறுத்தி விடக்கூடாது.அவர்,மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் போல் வெள்ளிக்கிழமை தோறும் ஒரு படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது என் ஆசை என்றார்.

கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் பேசும் போது,

ஜெய்ஆகாஷ் முதலில் நடித்த ராமகிருஷ்ணா படத்தின் போதே அவருக்கு ஸ்டன்ட் பயிற்சி அளித்தேன். தெலுங்கு ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து என்னை எழுப்பி சிலம்பம் பயிற்சி பெறுவார். அந்த காலகட்டத்தில் ரோப் கட்டி சண்டைக்காட்சி எடுப்பதில்லை.நேரடியாக தாவி குதித்துதான் சண்டை செய்ய வேண்டும்.அதையும் அவர் தைரியமாகச் செய்வார்.அவரது கடின உழைப்பு எனக்கு பிடிக்கும்.புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் 45 வாயத்துக்கு பிறகு தான் ஹீரோவாக புகழ் பெற்றார்.அவர்போல் ஜெய் ஆகாஷ் நல்ல புகழ் பெறுவார்.ஏனென்றால் அவரது கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் அவருக்கு வெற்றி அமைத்துத்தரும் என்றார்.

நடிகர் காதல் சுகுமார் பேசும்போது…..

காதல் படத்தில் நடித்த பிறகு சில படங்கள் இயக்கினேன். வெளிப்படங்களில் எனக்கு பெரிதாக யாரும் நடிக்க வாய்ப்பு தந்ததில்லை. ஆனால் ஜெய் ஆகாஷ் உடன் ஒரு படத்தில் நடித்தபோது என் நண்பர் ஆனார்.தற்போது அவர் படங்களில் நடிக்க எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார்.அவர் நினைத்தால் பிரபல காமெடி நடிகரை அழைத்து தன் படத்தில் நடிக்க வைக்க முடியும்.ஆனால் என்னைப்போன்றவர்களும் வளர வேண்டும் என்று எண்ணி என்னைப் போன்றவர்களை அழைத்து வாய்ப்பு தந்து. கொண்டிருக்கிறார். அவரது ஜெய்விஜயம் படம் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் பிர்லா போஸ் பேசும்போது…..,

ஜெய்ஆகாஷ் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர். அவர் நடித்த ஜெய்விஜயம் படத்தை ஏ கியூப் ஆப்பில் டவுன் லோட் செய்து பார்த்தேன்.பார்த்த சில நிமிடங்களிலேயே உட்கார்ந்த இடத்தை விட்டு எங்கும் எழுந்து செல்லாமல் முழுப்படத்தையும் தொடர்ச்சியாக பார்த்து முடித்தேன். அந்தளவுக்கு அப்படத்தில் நடித்த வர்கள் நடிப்பு, திரைக்கதை சஸ்பென்ஸ் இருந்தது.400 கோடி செலவில் எடுத்த படத்தைப் பார்க்கும்போது கூட அதை சிறிது நேரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறேன் . ஆனால் ஜெய்விஜயம் படத்தை தொடர்ச்சியாக முழு படத்தையும் பார்த்தேன். அப்படம் வெற்றி விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி என்றார்.

ஐ ஜே கே கட்சி துணைத் தலைவர் ஆனந்த் முருகன் பேசும்போது……

இன்னொரு விழாவுக்கு நான் செல்ல வேண்டி இருந்தும் அதற்கு கட்சியில் வேறு நிர்வாகியை அனுப்பி விட்டு ஜெய்விஜயம் வெற்றி விழாவுக்கு வந்திருக்கிறேன். அதற்குக் காரணம் ஜெய்ஆகாஷ் சிறந்த நடிகர் என்பதற்காக அல்ல,சிறந்த நடனம் ஆடுவார் என்பதற்காக அல்ல, சிறப்பாக ஸ்டன்ட் செய்வார் என்பதற்காக அல்ல அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதற்காக என் வாழ்த்தைத் தெரிவிக்க வந்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் போது,படத்தில் நடித்த ஹீரோ ஜெய்ஆகாஷ் மற்றும் நடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு வெற்றி கேடயம் வழங்கப்பட்டது. மேலும் ஜெய்விஜயம் படத்துக்குச் சிறந்த விமர்சனம் அளித்த டிரெண்டிங் சினிமாஸ் நவ் டாட் காம் வெப் சைட் நிருபர் ஜெயச்சந்திரனுக்கு கேடயம் பரிசளித்து பாராட்டுத் தெரிவித்தார் ஜெய்ஆகாஷ்.

Related Posts