தமிழ்த்திரையுலகில் முதன்முறையாக நுழையும் ஒட்டகம்

சிவா மற்றும் சந்தானம் நடித்த “யாயா” திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ், இரண்டாவது படைப்பாக “பக்ரீத்” திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தை “சிகை” மற்றும் “பட்சி” ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ராந்தும், நாயகியாக நடிகை வசுந்தராவும் நடிக்கிறார்கள்.
விவசாயம் செய்வதைப் பெருமையாக நினைத்து, இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயத்தை மேற்கொள்கிற முயற்சியிலிருக்கிற நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஒரு ஒட்டகம் திடீரென நுழைகிறது.
அந்த ஒட்டகத்தினால் அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவன் மேற்கொள்ளும் நெடுந்தூரப் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும் அதனால் ஏற்படும் திருப்புமுனைகளுமே “பக்ரீத்” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.
இந்தியா முழுவதும் பயணிக்கும் இப்படத்தில், அந்தந்த ஊர் பழக்க வழக்கங்கள் மற்றும் அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்யவிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர்.
இதற்காக சென்னை, ராஜஸ்தான், கோவா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தொகுப்புப்பணியை ரூபன் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக மதன் பணியாற்றுகிறார்.
தமிழ்த்திரையுலகில் ஒட்டகத்தை வைத்துப் படமெடுப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள்.