சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்குப் பதிலாக ஆங்கில நடிகர் – மீண்டும் தொடங்கும் சர்ச்சைப்படம்

இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல் செய்துவருபவர். முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையைத் திரைப்படமாக எடுக்கத்திட்டமிட்டனர்.அந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார்.அந்தப்படத்துக்கு ‘800’ என பெயரிட்டிருந்தனர்.

முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால் அந்தப் படத்தில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டார் விஜயசேதுபதி.

2020 அக்டோபர் மாதத்தில் இந்நிகழ்வுகள் நடந்தன.

அதன்பின் அப்பட வேலைகள் எதுவும் நடக்காமல் இருந்தன.

இப்போது அந்தப்பட வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

விஜய்சேதுபதிக்குப் பதிலாக, ஸ்லம்டாக் மில்லியனர் உட்பட பல படங்களில் நடித்திருக்கும் ஆங்கில நடிகர் தேவ்பட்டேல் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.

Related Posts