நடிகை சித்ரா மரணத்தில் சந்தேகம் – காவல்துறையில் புகார்
2018 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’
என்கிற நெடுந்தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்தத் தொடர் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்குத் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் விடுதியொன்றில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.
காவல்துறையினர், அவருடைய உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
நேற்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் சித்ரா கலந்து கொண்டார். திருவான்மியூரிலிருந்து தினமும் படப்பிடிப்புக்குச் சென்றுவர முடியாத காரணத்தால், பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். அவருடன் கணவர் ஹேமந்த்தும் தங்கியிருந்தார். அதிகாலை 2:30 மணிக்குப் படப்பிடிப்பு முடித்து அறைக்குத் திரும்பினார் சித்ரா.
அப்போது கணவர் ஹேமந்த்திடம் குளிக்கச் செல்வதாகக் கூறி வெளியே செல்லச் சொல்லியிருக்கிறார் சித்ரா. சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டியிருக்கிறார் ஹேமந்த். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் விடுதி ஊழியரிடம் அறையின் இன்னொரு சாவியை வாங்கி கதவைத் திறந்தனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கு மாட்டி, சித்ரா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
உடனடியாக விடுதி ஊழியர்களுடன் சேர்ந்து சித்ராவின் உடலைக் கீழே இறக்கி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த நசரத்பேட்டை காவல்துறையினர் சித்ராவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நேற்று படப்பிடிப்பில் சித்ராவுடன் நடித்தவர்களுடனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சித்ராவின் தந்தை நசரத்பேட்டை காவல்துறையினரிடம் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், ஹேமந்த் – சித்ரா ஆகியோர் அணமையில்தான் பதிவுத் திருமணம் செய்துள்ளனர் என்பதால் வருவாய் கோட்ட அலுவலர் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.