நடிகை சித்ரா தற்கொலை வழக்கு நேர்மையாக நடக்கவில்லையா?
சின்னத்திரை நடிகை சித்ரா, டிசம்பர் 9 ஆம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார்.
சித்ராவுடன் தொலைக்காட்சித் தொடரில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உள்பட 16 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
ஆர்டிஓ திவ்யஸ்ரீ இன்று தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார்
இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் விஜயா மனு அளித்துள்ளார்.
ஏற்கெனவே, காவல்துறை ஆர்டிஓ ஆகிய இருதரப்பும் விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றின் மேல் நம்பிக்கை இல்லாமல் சித்ராவின் தாயார் இப்படி ஒரு மனு கொடுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.











