செய்திக் குறிப்புகள்

இந்த வருடம் சிசிஎல் கப் எங்களுக்குத்தான் – ஆர்யா பரத் சாந்தனு சபதம்

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.இதில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். 

23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17 மார்ச் 2024 வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஐதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சென்னை அணியின் தலைவராக நடிகர் ஆர்யா செயல்பட்டுவருகிறார்.கங்கா பிரசாத் நிறுவனராக உள்ளார். சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அசோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே.சத்யா, தாசரதி, ஷரவ் ஆகியோர் உட்பட பலமுக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

சென்னை ரைனோஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 25 பிப்ரவரி அன்று ஷார்ஜாவில் எதிர்கொள்கிறது. தென்னிந்தியாவில் ஸ்டார் நெட்வொர்க் ஒவ்வொரு மொழிகளிலும் தனித்தனியாகப் போட்டிகளை ஒளிபரப்பு செய்யவுள்ளது. தமிழில் விஜய் சூப்பர் சேனலில் போட்டிகள் தொடர்ந்து ஒளிபரப்பப் படவுள்ளன. டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாஸ் ஆகியன 20 போட்டிகளையும் ஒளிபரப்பு செய்யவுள்ளது.  

திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது.  

இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும்,சென்னை ரைனோஸ் அணியினர் மற்றும் சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி இன்று சென்னையில் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
 
இந்நிகழ்வினில் சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி கூறியதாவது..,

சிசிஎல்-இல் மற்ற எந்த அணியைக் கேட்டாலும், சென்னை தான் எங்களுக்குப் பிடித்த அணி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்த அணியின் மீது அனைவருக்கும் அதிகமான அன்பு இருக்கிறது.ஐபிஎல்லுக்கு பிறகு சிசிஎல் தான் அதிக அளவு பிரபலமான, அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும். ஏனென்றால் நிறைய தொலைக்காட்சிகள் இப்போட்டியை ஒளிபரப்புவதில் ஒன்றிணைந்துள்ளன.இந்த ஆண்டு, இந்த விளையாட்டு மேலும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. விளையாட வரும் அனைத்து நடிகர்களும் பணத்திற்காக இல்லாமல் பெரும் ஆர்வத்தினால் விருப்பத்தினால் மட்டுமே வருகின்றனர்.அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம் என்றார்.
 
நடிகர் ஆர்யா  கூறியதாவது…..

சிசிஎல் போன்ற ஒரு போட்டியை ஒருங்கிணைத்து நடத்துவது சாதாரண விசயம் கிடையாது.ஆனால் ஒவ்வொரு வருடமும் ஆர்வம் குறையாமல் அதை நடத்தி வருகிறார் விஷ்ணு. அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைந்து, அதைப் புத்துணர்ச்சியோடு நடத்தி வருகிறார். எங்கள் அணியைப் பொறுத்தவரை அனைவரும் நட்போடு இணைந்து விளையாடுகிறோம்.நாங்கள் விளையாட்டின் போது சினிமாவை ஒதுக்கி வைத்து, முழுமூச்சாக விளையாட்டை மட்டுமே நோக்கமாகக் கொண்டு விளையாடுகிறோம்.ஒவ்வொரு வருடமும் விளையாட்டு முடிந்து, நாங்கள் எங்களது தனிப்பட்ட வாழ்கைக்குத் திரும்பினாலும்,அடுத்த வருடம் விளையாட்டு துவங்கும் போது விட்ட இடத்தில் இருந்து தொடருவோம்.மிகவும் உற்சாகமாகிவிடுவோம்.இது தான் இதன் சிறப்பம்சமே.இது ஒரு ஆரோக்கியமான, அதே நேரத்தில் மகிழ்ச்சி நிறைந்த விளையாட்டு. இதில் பங்குகொள்வது மகிழ்ச்சி என்றார்.

நடிகர் பரத் கூறியதாவது…..

சிசிஎல் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகிறது.அதற்கு விஷ்ணுவிற்கு தான் நன்றி கூற வேண்டும்.இந்த வருடம் விளையாட்டு இன்னும் பிரம்மாண்டமாகி இருக்கிறது. சிசிஎல் என்பது, அனைத்து மொழி நடிகர்களையும் சந்தித்து நட்புடன் பழகுவதற்கான ஒரு வாய்ப்பு. நட்போடு இருந்தாலும், இந்த வருடம் கப் எடுப்பதில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.கண்டிப்பாக வெல்வோம் என்றார்.

நடிகர் சாந்தனு கூறியதாவது….

சென்னை ரைனோஸில் விளையாடுவது வெற்றி, தோல்வியைக் கடந்து ஒரு மகிழ்ச்சியை பேரின்பத்தைக் கொடுக்கிறது. மீண்டும்  நண்பர்களுடன் இணைந்து பயணிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது.விஷ்ணு, ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.அதற்காக அவருக்கு நன்றி.இந்த முறை கப் எடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறோம்.எங்கள் உடன் இணைந்து பயணிக்கும் எங்கள் குழுவிற்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts