சமூகநீதி பேசும் அழகிய கண்ணே – விஜய்சேதுபதி நடித்துள்ளார்
எஸ்தல் எண்டடெயினர் (Esthell Entertainer) நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் (இவர் இயக்குநர் சீனுராமசாமியின் தம்பி)இயக்கத்தில்,திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அழகிய கண்ணே”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் ஜூன் 13 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
நடிகர் அமுதவாணன் பேசியதாவது……
பல மேடைகளில் பேசியுள்ளேன் ஆனால் இங்கு பேசுவதற்குக் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, மேடையில் பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். கதாநாயகன் லியோ சிவக்குமார் படத்தில் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். ஷுட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், நன்றி என்றார்.
விஜே ஆண்ட்ரூஸ் பேசியதாவது……
இங்கு மேடையில் உள்ள ஆளுமைகளின் படைப்பிற்கு மிகப்பெரிய இரசிகன் நான், அவர்களுடன் அருகில் அமர்வது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது, நான் ஒரு படத்தில் நடித்து, அதற்காக மேடையில் பேசுவது இதுவே முதல் முறையாகும். லியோ சிவக்குமார் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார், சஞ்சிதாவிடம் இருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டேன். இந்தப்படம் ஒரு சிறப்பான வெற்றியைப் பெரும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன், நீங்களும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும், படக்குழு அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை பானு பேசியதாவது……
இந்தப் படத்தில் நடிக்கும்போது ஒரு குடும்பத்தில் இணைந்த உணர்வு இருந்தது, அனைவரும் என்னை அக்கறையோடு பார்த்துக்கொண்டனர் , படம் அழகாக இருக்கிறது. உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும், அனைவருக்கும் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் அசோக்குமார் பேசியதாவது……
வாய்ப்பளித்த விஜயகுமார் அவர்களுக்கு நன்றி. இப்படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்
தயாரிப்பு நிறுவனம் சார்பில் ராஜகோபால் பேசியதாவது……
எஸ்தல் எண்டடெயினர் சார்பில் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். லியோனி சார் கொரோனா காலகட்டத்தில் இந்தக் கதையைக் கொண்டு வந்தார். ஜேவியர் பிரிட்டோ அவர்களும் இந்தக்கதையை மிகச்சிறந்த கதை என்றார். கதை பிடித்துப்போனதால் கொரோனா என்றாலும் பரவாயில்லை என தயாரிப்பில் இறங்கி விட்டோம். லியோ சிவக்குமார் மிக அருமையான கதாபாத்திரம் செய்துள்ளார். படம் நல்ல படைப்பாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது……
என்னைப் பற்றி இப்போதும் நீங்கள் எழுதுகிறீர்கள். என்னை இரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுக்கு என் நன்றிகள். கே எஸ் ரவிக்குமார் சார் இரசிகை நான், நீங்கள் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. நாயகன் சிவா ஃபேமிலி எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக்கொள்கிறார்கள் என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படி தான் இருந்தது. லியோனி சார் பழக மிக இனிமையானவர். எனக்கு மிக முக்கியமான பாத்திரம், ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப்பெண், என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். ஒரு உதவி இயக்குநரின் வாழ்வை இந்தப் படம் மூலம் அறிந்துகொள்வீர்கள். ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது……
பள்ளிக்காலத்திலிருந்தே லியோனி சார் இரசிகன் நான், அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும். இயக்குநர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவு, அவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது. லியோனி சார் யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் ஆர்.விஜயகுமார் பேசியதாவது…..
இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர், அவரின் உடன் பிறந்த தம்பி நான், அவருடன் 4 படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கில், இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன். இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சார் அவர்களின் தீவிர இரசிகன் நான், அவர் என்னை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. கோவிட் காலத்தில் இந்தக்கதையை கடும் இன்னல்களுக்கிடையில் உருவாக்கினேன். மாமனிதன் படத்தில் சிவா ஒரு கதாப்பாத்திரம் செய்தார். அப்போது அண்ணன் இவன் ஒரு ஹீரோ மெட்டீரியல், என்றார். அதை மனதில் வைத்து அவரை ஹிரோவாக்கினேன். இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் லியோனி அண்ணன், அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னை அனுப்பினார். சிவா இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார். அவர் தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தைப் பிடிப்பார். இப்படம் மதுரையில் ஆரம்பித்து சென்னை நோக்கி நகரும் ஒரு கதை. உதவி இயக்குநரின் வாழ்வைச் சொல்லும் கதை. பல நாயகிகள் இந்தக் கதையைக் கேட்டு தயங்கினார்கள் ஆனால் சஞ்சிதா ஷெட்டி கேட்டவுடன் நடிக்கிறேன் சார் என்றார். அவருக்கு நன்றி. அவருக்கு இந்தப்படம் ஒரு திருப்பமாக இருக்கும். எஸ்தல் எண்டர்டெயினர் மற்றும் படத்தை வெளியிடும் கண்ணன்ரவி குரூப் நிறுவனத்திற்கு நன்றி. பிரபு சாலமன் சார் பிரபு சாலமனாகவே நடித்துள்ளார் அவர் அலுவலகத்தையும் படப்பிடிப்பிற்குத் தந்தார். அவருக்கு என் நன்றிகள். நட்புக்காக முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய்சேதுபதியாகவே நடித்துள்ளார் அவருக்கு என் பெரிய நன்றி. சமூக நீதி பேசும் அழகான படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசியதாவது…….
இந்த மேடை எனக்குக் கனவு, சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்தப்படத்தைச் சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கைப் பயணம் இருந்தது, எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, என்னை இந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி, இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். எனக்கு நடிப்பில் நிறைய உதவிகள் செய்துள்ளார், இந்தப்படம் எனக்கு முதல் படி அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி என்றார்.
திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது……
கே எஸ் ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய இரசிகன் நான், என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன், இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள், விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி, நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார், படக்குழு அனைவருக்கும் நன்றி, என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்தப் படத்தில் நடித்தான், பல முயற்சிகள் செய்தான் அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள் படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.











