முந்தானை முடிச்சு ரீமேக்குக்கு இசை ஏ.ஆர்.ரகுமான் ?
பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த படம் முந்தானை முடிச்சு.1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தில்தான் நடிகை ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது.
பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார். ஆனால் இம்முறை கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சசிகுமார். அவருக்கேற்பவும் தற்காலத்துக்கேற்பவும் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம் பாக்யராஜ். இப்படத்தை அசுரகுரு படத்தைத் தயாரித்த ஜே எஸ் பி. சதீஷ் தயாரிக்கவிருக்கிறார்.
முந்தானை முடிச்சு படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காதல், சோகம்,நகைச்சுவை ஆகிய எல்லா அம்சங்களும் அடங்கிய அப்படத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இப்போது மீண்டும் உருவாக்கப்படும் படத்துக்கும் இளையராஜாவே இசையமைக்கக்கூடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர்கள் எல்லோரும் ஆச்சரியப்படும்படி இப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் ஒப்புக்கொண்டால் இந்தச்சூழல்களுக்கு அவர் எவ்வாறு மெட்டமைப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.












