தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு – உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நடிகர்
தஞ்சை பெருவுடையார் கோயிலை மாமன்னன் இராசராச சோழன் 1010 ஆம் ஆண்டு கட்டினார். இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது.
கடைசியாக 1997 ஆம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியகோவில் குடமுழுக்கு இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக மக்கள் இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். உலகெங்குமிருந்து தமிழர்கள் இதில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளனர். தஞ்சை மக்கள், உலகத் தமிழர்களை இவ்விழாவுக்காக வரவேற்று வருகிறார்கள்.
அந்த வகையில், தஞ்சை மக்களால் பப்ளிக் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகரும், தொழிலதிபருமான துரை சுதாகர் மற்றும் அவரது ரசிகர்கள், தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவையொட்டி, அக்கோயிலின் சிறப்பையும், தஞ்சையின் பெருமையையும் சமூக வலைதளங்கள் மூலமாக உலக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.
தஞ்சையைத் தாண்டி தமிழகம் மட்டும் இன்றி உலக மக்களும் தஞ்சை பெரிய கோவிலும் குடமுழுக்கு நிகழ்வை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகர் துரை சுதாகர், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்த துரை சுதாகர், ‘டேனி’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிகராவதற்கு முன்பே தஞ்சையில் பிரபலமானவராக திகழ்ந்தவர். நடிகரானவுடன், இவர் மீது அன்பு கொண்டவர்கள், நடிகர் துரை சுதாகர் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி, அதன் மூலம் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நற்பணிகள் செய்துவருகிறார்கள்.
இப்போது அவர்கள் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நிகழ்வு, அதன் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.











