சாம்பியன் – திரைப்பட விமர்சனம்
வடசென்னை இளைஞர்களின் கனவுகளில் ஒன்று, இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று விளையாடவேண்டும் என்பது.
அதற்காகத் தீவிரமாக முயலும் ஒருவனைப் பற்றிய கதைதான் சாம்பியன்.
நாயகனாக விஷ்வா எனும் புதுமுகம் நடித்திருக்கிறார். கால்பந்து விளையாடும் காட்சிகளில் பொருத்தமாக இருக்கிறார்.
அன்பு,காதல், கோபம்,தவிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்த வேண்டிய வேடம் அவருக்கு. அவற்றில் இன்னும் பயிற்சி வேண்டும். எல்லாக்காட்சிகளிலும் ஒரேமாதிரி இருக்கிறார்.
செளமிகா பாண்டியன், மிருணாளினி ஆகிய இரு நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். நாயகனை ஊக்குவிக்கும் வேலைதான் இருவருக்கும்.
கால்பந்து பயிற்சியாளராக நடித்துக்கும் நரேன் வேடத்துக்கேற்ப இருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஸ்டன்சிவா, நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ்பாரதிராஜா, அவருடைய நண்பராக நடித்திருக்கும் வினோத் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜெயலட்சுமி சிறப்பு. என் மகனுக்கு எதுவும் ஆகக்கூடாது அண்ணே என்று ஆக்ரோசத்தை அமைதியாக வெளிப்படுத்தும் காட்சி நன்று.
சுஜித்சாரங்கின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. கால்பந்து விளையாட்டுக்காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறார்.
அரோல்கரோலியின் இசையில் பாடல்கள் தாழ்வில்லை. வாவீரனே பாடல் கவனிக்கவைக்கிறது.
வெங்கட்ராஜின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன. கதைக்கான வசனங்கள் என்பதைத் தாண்டி வாழ்க்கைக்கான வசனங்களாக இருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். ஒரு திரைக்கதையை நேர்மையாகப் பதிவு செய்வார் என்பதை இந்தப்படத்திலும் காட்டியிருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைகளையே எடுத்துக் கொள்வதால் சலிப்பு ஏற்படுகிறது. அடுத்து இதுதானே என்று பார்வையாளர்கள் சொல்லும் வண்ணமே காட்சிகள் அமைந்திருப்பதும் பலவீனம்.











