சினிமா செய்திகள்

சர்கார் பாடல் – கிண்டல் செய்த கலாநிதிமாறன் நெளிந்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் பேசியதாவது:

இந்தப்படம் தொடங்கி நடந்துகொண்டிருந்த போது செம்பியன் என்னைப் பார்க்க வந்தார்.

அவரிடம் பட வேலைகள் எப்படிப் போகுது? என்று கேட்டேன்.

நல்லாப் போகுது சார், ஒரு பாட்டு வந்திருக்கு கேக்கறீங்களா? என்றார்.

சரி போடுங்க கேட்போம் என்றேன்.

அவர் பாடலைப் போட்டார். எனக்கு ஒண்ணுமே புரியல,

செம்பியன் என்ன இது? ஒண்ணுமே புரியலயே என்றேன்.

அதற்கு அவர், இது எல்லாம் டம்மியான பாடல்வரிகள், சரியான வரிகள் போட்டு பதிவு செய்வார்கள் என்றார்.

அதன்பின் ஒருநாள்,

இன்னைக்கு ஒரு பாட்டு ரிலீஸ் பண்றோம் கேக்கறீங்களா? என்றார்.

சரி போடுங்க கேட்போம் என்றேன். அவர் போட்டார்.கேட்டேன், அதே புரியாத வரிகள் கொண்ட பாடல்.

என்ன இது? என்று அவரிடம் கேட்க அவர் பதில் சொல்லத்தடுமாறினார்.

அந்தப்பாடல்தான் சிம்டாங்காரன். இப்போது அந்தப் பாடல் ஹிட். விஜய் நடனம், முருகதாஸ் காட்சியில் பார்க்கும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும்.

உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளை ரகுமான் நடத்துகிறார். அதில் ஒரு தமிழ்ப் பாடலாவது பாடி விடுகிறார். சொன்ன நேரத்தில் சொன்ன பட்ஜெட்டில் படம் முடித்துக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி.

சினிமாவில் சிம்பிள், ஹம்பிளான மனிதர்கள் இருவர். ஒருவர் ரஜினி. இன்னொருவர் தளபதி விஜய். அவர் ரசிகர்கள் நினைப்பதையும் விரைவில் செய்வார்.அவர் 3டி படமொன்றில் நடிக்க வேண்டும், அகில இந்திய அளவில் புகழ்பெற வேண்டும் என்றார் கலாநிதி மாறன்.

கலாநிதிமாறன் சிம்டாங்காரன் பாடல் பற்றிச் சொன்ன கருத்துகள் வெகுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அந்நேரம் ஏ.ஆர்.ரகுமான் சங்கடமாக நெளிந்தார்.

இனிமேலாவது இப்படிப்பட்ட பாடல்களை உருவாக்காமல் இருப்பது அவருக்கும் தமிழ்மொழிக்கும் நல்லது.

Related Posts