செய்திக் குறிப்புகள்

ஸ்ரீரெட்டியின் ஆபத்தான புது முயற்சி

அண்மைக்காலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுகளை தெலுங்குத் திரையுலகமும் ஆந்திர அரசும் புறந்தள்ளிவிட்டன.

இதைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகின் பக்கம் பார்வையைத் திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார்.

இவரின் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்துப் படம் தயாரிக்கப்போவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதுவே ஒரு தவறான முன் உதாரணம் தான். ஆகஸ்ட் 21 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்கத் தயார் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ்த் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுபற்றி வாராகி கூறும்போது,

“சினிமா துறையில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தில் ஸ்ரீ ரெட்டி புதுவிதமான முயற்சி எடுத்திருக்கிறார். அதாவது சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி, அதன்மூலம் மிரட்டி வாய்ப்பு தேடுவது என்கிற தவறான முன்னுதாரணத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாகக் கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலைத் தொடர்ந்து வருகிறார்.

ஆனால் இதுவரை அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. இதிலிருந்தே சிலரை மிரட்டிப் பணம் பறிப்பது, அல்லது வாய்ப்பு கேட்பது தான் அவரது நோக்கமாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.

தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்குத் திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தரத் தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரீரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும். ஆனால் லாரன்ஸின் பெருந்தன்மையான செயலை முழுமனதாக ஏற்காமல் லாரன்ஸையே விமர்சித்ததுதான் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

ராகவா லாரன்ஸ் மிகவும் நேர்மையானவர். இந்தச் சமுதாயத்தில் சமூக சிந்தனையுடன் செயல்படக்கூடியவர். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை தனது சொந்தச் செலவில் படிக்க வைத்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகராகவும் இருக்கிறார்.

அப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ், தனது பெருந்தன்மையை புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கும் ஸ்ரீரெட்டி போன்ற தவறான நபர்களுக்கு வாய்ப்பு தருவதைத் தவிர்க்கவேண்டும் என அவரிடம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டுக்களை வீசிய ஸ்ரீ ரெட்டி, இனி அங்கே தனது பருப்பு வேகாது என தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும்.

நீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, இது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும்.. அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள்..

இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும். எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்”

என இவ்வாறு கூறியுள்ளார் வாராகி.

Related Posts