நடிகை கெளதமி அடாவடி – இயக்குநர் கொதிப்பு
வாராகி இயக்கி நடித்துள்ள சிவா மனசுல புஷ்பா படத்திற்கு, எந்த நேரத்தில் இந்தப் பெயரை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்தப் பெயரே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது.
படத்தின் பெயரை மாற்றினால் தான் இந்தப்படம் வெளியாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
பெயரை மாற்றச்சொலி போர்க்கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டு தான். சிக்கல் உருவானது எப்படி..?
வாராகி கூறுகிறார்…..
இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கியது உண்மைதான். ஆனால் இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காட்டியபோது படத்தைப் பார்த்துவிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். சில வார்த்தைகளை மியூட் பண்ண சொன்னார்கள்.
ஆனால் எதிர்பாராத இடியாக டெல்லியில் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும், படத்தின் மைய கேரக்டர்களான சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி உத்தரவு வந்தது..
இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்தோம். அதையடுத்து இரண்டு தினங்களுக்குமுன் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கௌதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள். இந்தப்படத்தை பார்த்தார்கள். படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கௌதமி, அதன்பின் டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி வலியுறுத்தினார்..
கௌதமியிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது, படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரைக் குறிப்பிடுவதாகக் கூறினார் கௌதமி. மேலும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரைக் குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினார். அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லாச் சான்றிதழ் (NOC) வாங்கிக் கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நிபந்தனை விதித்தார்.
“கௌதமி அப்படிச் சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே என நாங்கள் குறிப்பிட்டிருந்தும் கௌதமி இவ்வாறு சொன்னது ஆச்சர்யம் தந்தது. சரி அவர் சொல்வது போல, யாரை குறிப்பிடுகிறது என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள்.. நான் அவர்களிடம் இருந்து அனுமதிக் கடிதம் பெற்று தருகிறேன் என கூறினால் அதற்கு கௌதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.
அரசியல் கலந்த காதல் கதையாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன் இந்தப்படம் தன் கணவனை மாற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணைப் பற்றியும் சொல்கிறது.. இதற்கு முன் இதுபோன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன..? ஒரு பெண் கணவனை மாற்றிக்கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கௌதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கௌதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.
சினிமாவில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, வேறு துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. சென்சார் போர்டில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கதையை கதையாகத்தான் பார்க்கவேண்டும். ஒவ்வொரு கேரக்டரையும் இவர் அவராக இருப்பாரோ என தாங்களாக நினைத்துக்கொண்டு தங்களது சொந்தக்கருத்தை முன்வைத்து சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டினால் அது சினிமாவின் அழிவுக்குத்தான் வித்திடும். சினிமா உலகத்தில் இருந்துகொண்டே நடிகை கௌதமியும் இப்படி செய்வதுதான் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது” என்கிறார் வாராகி.
இதையடுத்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவதற்கும் தயாராகி வருகிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான வாராகி.











