செய்திக் குறிப்புகள்

பன் பட்டர் ஜாமில் குட்டி நயன்தாரா – நாயகன் பேச்சு

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் பன் பட்டர் ஜாம். இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத்,பவ்யா ட்ரிக்கா ஆகியோர்நடித்துள்ளனர்.மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன்,தேவதர்ஷினி,மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாபு ஒளிப்பதிவில்,ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு ஜூலை 7 அன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. .

இந்த நிகழ்வில்நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசும்போது….

இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக்பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன்.அதுக்கு வாய்ப்பு கொடுத்த பெரிய மனிதர்களுக்கும்.அதுல எனக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்ச அந்த மக்களுக்கும் தான் நன்றி சொல்லணும்.ஜியோ ஹாட்ஸ்டார்ல நானே எழுதி இயக்கி நடிச்சு அப்படி ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருந்தேன்.அந்த படத்த பண்ணிட்டு இருக்கும்போதுதான் இந்த வாய்ப்பு வந்தது.அது கொஞ்சம் லேட் ஆனதால இதை பண்ணேன்.
இன்றைய ஜென்-சிக்கு ஒரு டீப்பான விஷயத்தை எப்படி ஷேர் பண்ணி கொடுக்கனும்னு தெரிஞ்ச ஒரு டைரக்டர். தான் ராகவ் மிர்தாத்.எனக்கு ஒரு கிரவுண்ட் கொடுத்திருக்கீங்க.இது ஒரு படம்.இவ்வளவு பேர் பாராட்டக்கூடிய ஒரு இடத்துல நிற்க வச்சிருக்கீங்க. உங்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.இந்த படத்தோட எடிட்டர் ஜான் ஆப்ரகாம் இன்னொரு டைரக்டர்னு சொல்லலாம். தன்னோட டேபிள்ல படத்தை வேற மாதிரி மாத்துனாரு.அதுமட்டுமல்ல இது தயாரிப்பாளர் சுரேஷ் சாரின் கதைங்கறதுனால ஈஸியா ஓகே ஆயிடுச்சு.
எல்லாருமே என்னை ஹீரோன்னு சொல்றாங்க.. ஹீரோன்னா பொதுவா படத்துல அம்மாவ காப்பாத்துறவங்க,இல்ல ஆபத்துல இருக்குறவங்களை காப்பாத்துறவங்க.ஆனா என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு ஒத்துப்பேன்.
எங்க படத்தை பார்க்குறதுக்கு ஒரு நல்ல காரணம் என்ன அப்படின்னா? தேவையில்லாத விஷயங்களெல்லாம் சொல்லாம உங்களை போட்டு தொந்தரவு பண்ணாம, உங்க டைம் மதிச்சு சீக்கிரமா முடியற மாதிரியான ஒரு படம் கொடுத்துருக்கோம்.ஒரு முக்கியமான விஷயத்தை ஒரு நல்ல மெசேஜா சுகர் கோட் பண்ணி உங்களுக்கு கொடுத்து கொடுத்திருக்கார் இயக்குநர்.இந்த எல்லாத்துக்குமே இசையமைப்பாளர் நிவாஸ் தான். காரணம். இந்தப்படம் வர்றதுக்கு முன்னாடி,நான் நடிக்கிறதுக்கு முன்னாடி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு முகம் நிவாஸ்.
கண்டிப்பா நீங்க குடுக்கற பணம் வேஸ்ட் ஆகாது. நீங்க எல்லாரும் போய் குடும்பம் குழந்தைகளோட நம்பி பாக்கலாம்.சொல்லப்போனா இது ஒரு மூணு ஹீரோ சப்ஜெக்ட்.பப்பு, மைக்கேல்,நான் எல்லாரும் சேர்ந்து நடிச்ச படம்.இந்தப்படத்துல ஒரு குட்டி நயன்தாரா, ஒரு குட்டி அதிதிராவ் ஹைதரி இருக்காங்க.இவங்க ரெண்டு பேருமே இந்தப்படத்துக்கு அப்புறம் அந்த ரெண்டு ஹீரோயின்களை விட பெருசா ஆகணும் அப்படின்னு சொல்லி வேண்டிக்கறேன்.
நானும் ஒரு டைரக்டர்னு நினைக்கிறேன்ங்கறதுனால டைரக்டர்கிட்ட அவர் சொல்றதை கீழ்ப்படிஞ்சு பண்ணி நடிக்கத்தெரியும்.நான் அதை பண்ணிருக்கேன்.இன்னைக்கு எந்தப்படம் ஓடும், எந்தப்படமும் ஓடாதுன்னு தெரியல.எந்தக்கதை நல்ல கதை,எந்தக்கதை பண்ணக்கூடாதுன்னு தெரியல.ஒரு நைட்டுல எல்லாரும் என்ன வேணாலும் ஆகலாம். நாளைக்கு என்ன வேணாலும் ஆகும் அப்படின்ற மாதிரியான ஒரு இதுலதான் இருக்கு.இன்னைக்கு நீங்க பாக்குற ஒரே ஒரு புட் டெலிவரி ஆப்ல பார்த்தா நிறைய சாப்பாடு இருக்கும்.எந்த சாப்பாட நீங்க ஆர்டர் பண்ணனும்னு தெரியாது.ஆனா பன் பட்டர் ஜாம் தான் எல்லா ஊர்லயும்,எல்லா கடைகளிலும் கிடைக்கும். பசிக்குதுன்னா எந்த கடையில வேணாலும் பன் பட்டர் ஜாம் நம்பி சாப்பிடலாம்.நாளைக்கு இந்த சினிமா எனக்கு எதாவது கொடுத்தா திருப்பி சினிமாவுல தான் இருக்கணும்னு ஆசை.எனக்கு படம் தயாரிக்கனும்னு விருப்பம் இருக்கு.
ஒருத்தர் ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரும் திரும்பி பார்க்க வெச்சாரு.தளபதி விஜய் ஒரு போன் கால்ல எனக்கு பண்ணி கொடுத்தாரு.அவரு என்னை எப்படி பாக்குறாரு? அவருக்கு என்னை பிடிக்குமா? இல்ல என்ன விஷயத்துக்காக எனக்கு இத வாழ்த்துனார் அப்படிங்கறதெல்லாம் வந்து எனக்கு ரொம்ப பிரமிப்பாவும் இருக்கு.அவர் சொன்ன விஷயம் தான் இன்னைக்கு நிறைய பேருக்கு எங்க படம் தெரிஞ்சிருக்கு சமீபத்துல ஒரு நிகழ்வுல,அவரோட இரசிகர்களை எல்லாம் பாத்து நீங்க எல்லாம் இல்லனா நான் என்ன பண்ணப்போறேன்னு தெரியலப்பா அப்படின்னாரு. நான் அவர்கிட்ட சொல்றேன் நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா என்று பேசினார்.

இயக்குநர் ராகவ் மிர்தத் பேசும்போது…..

என்னுடைய முதல்படம் சரியாகப் போகவில்லை. பேசாமல் சினிமாவை விட்டு போய்விடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் எப்போதும் என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர் நண்பன் சினிமாவாலா சதீஷ்.என்னிடம் இருக்கும் கதைகள் பற்றி பார்ப்போர் இடமெல்லாம் சிலாகித்து பேசுவார். என்னுடைய கஷ்டம் அறிந்து கேட்காமலேயே பணம் கொடுத்து உதவுவார்.இந்தப்பட வாய்ப்பு அவர் மூலமாகத்தான் வந்தது.இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் மிகவும் அன்பான ஒரு மனிதர். வெளிநாட்டுப்பாணியில் படங்களை எடுக்கலாமே என கதை சொல்ல வந்தால் இங்கே இருக்கும் சினிமா வேற மாதிரி இருக்கும் தயாரிப்பாளர்களே கிடைக்க மாட்டார்கள்.அவர் தயாரிப்பாளராக வரும்போதே கதையின் ஒன் லைன் வைத்திருந்தார்.ஆனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.போட்டோஷூட் பண்ணாமல் டிசைன்களை வரைய வேண்டும் என்று சொன்னபோது எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார்.நான் கேட்ட எல்லாவற்றையும் மறுக்காமல் கொடுத்தார். நான் தனித்தன்மையாக என்னென்ன விஷயங்களை பண்ண வேண்டும் என நினைத்தேனோ அது எல்லாவற்றுக்குமே அனுமதி கொடுத்தார்.அவருக்கு நன்றி.அவர் இல்லை என்றால் இந்தப்படம் சாத்தியமில்லை.நடிகர் ராஜூ ஜெயமோகன் இந்தப்படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய கிப்ட்.வாழ்க்கையே முடிந்தது,சினிமாவைவிட்டு வேறு ஏதாவது வேலைக்குப் போகலாம் என நினைத்தபோது இந்தப்படம்தான் எனக்கு நம்பிக்கை தந்தது என்று கூறினார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா பேசும்போது….

தயாரிப்பாளர் சுரேஷ் என்னுடைய நண்பர்தான். அவர்தான் ராஜுடன் இணைந்து இந்தப்படத்தை பண்ணலாம் என ஒரு ஐடியாவை கொண்டு வந்தார். ராகவ்மிர்தத் அற்புதமான பணியை செய்துள்ளார்.
இந்தப்படத்தின் பிஈமியரை நேற்று பார்த்தபோது முழு திருப்தியாக உணர்ந்தேன்.நலன் குமாரசாமிக்கு அடுத்ததாக ஒரு வலுவான கதாசிரியராக ராகவை பார்க்கிறேன்.அவரது அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்.ராஜுவை திரையில் பார்த்ததுமே அவரை அழைத்து நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என கூறினேன்.அவர் நேற்று வரை நம்பவில்லை.இன்று மற்றவர்கள் பேசிய பிறகுதான் நம்பியுள்ளார்.இந்தப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.முதன்முதலாக விஜய்சேதுபதி அண்ணா இரண்டு பாடல்களை எழுதி ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார்.கார்த்திக் நேத்தா,சரஸ்வதி மேனன்,எம்கே பாலாஜி ஆகியோர் மற்ற பாடல்களை எழுதியுள்ளார்கள் என்று கூறினார்.

நாயகி ஆத்யா பிரசாத் பேசும்போது….

பன் பட்டர் ஜாமில் ஃபேமிலி,லவ்,பிரண்ட்ஷிப் என எல்லாமே இருக்கும்.எல்லாத்தரப்பு மக்களையும் இந்தப்படம் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.

நாயகி பவ்யா ட்ரிக்கா பேசும்போது…..

என் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரத்தில் எல்லா வயதை சேர்ந்த நபர்களும் இருகிறார்கள்.எனக்கு இந்த பன் பட்டர் ஜாம் பட வாய்ப்பு வந்தபோது அதை சொன்னதும் உடனே எல்லோருமே ஆரவாரமாக சூப்பர் என்று சொன்னார்கள்.அதைப்பார்த்ததுமே எனக்கு ஒரு பாசிட்டிவான உணர்வு ஏற்பட்டது.கட்டாயம் இரசிகர்களுக்கும் இது பிடிக்கும்.தவிர,இந்தப்படத்தின் கதை பர்சனல் ஆக எனக்கு ரொம்பரொம்ப நெருக்கமானதாக இருந்தது.இயக்குநர் ராகவ் ஒரு பர்ஃபெக்சனிஸ்ட்.சின்னச்சின்ன விஷயங்களைக் கூட டீடைலாக சொல்லி இருக்கிறார்.சார்லி சாரை திரையில் பார்க்கும்போதே ஒரு சந்தோசமாக இருக்கும்.ஒரு ஆன்மீகவாதியும் கூட.அற்புதமான நடிகர்.சரண்யா பொன்வண்ணன்,தேவதர்ஷினி ஆகிய இருவருடனும் நடித்தபோது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. நிவாஸ்கேபிரசன்னாவின் இசையைக் கேட்டாலே எனக்குப் புல்லரித்துவிடும்.தியா தியா என்னுடைய ஃபேவரைட் பாடல்.பப்பு,மைக்கேல்,ஆத்யா எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.ராஜூவைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.அவுட்ஸ்டாண்டிங்.காட்சிகளில் நடிக்கும்போது வெளியிலிருந்து என்னை சிரிக்க வைப்பார்.எனக்கு அது கஷ்டமாக இருந்தது.ராஜூவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும்போது…..

எனக்கு நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்கள் என்று ராஜூ எப்போதும் சந்தோஷமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.எல்லோரும் என்னிடம் அப்படி சொல்லும் அளவுக்கு எனக்கு கடவுள் ஒரு நல்லஇடத்தைக் கொடுத்திருக்கிறார்.தமிழ்த்திரையுலகம் எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறது.கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.எல்லாப்படமுமே எனக்கு முதல்படம் போலத்தான்.இயக்குநர் ராகவ் படமாக்கிய காட்சிகள் எல்லாமே ரொம்ப புதுமையாக இருந்தது. என்னைவைத்து ஒரு காட்சி எடுக்கும் போது, இதற்கடுத்ததாக எதிரில் வேறுவிதமாக ஒரு காட்சியை எடுக்கப்போகிறேன் என்பார்.அதில் யார் நடிக்கிறார்கள், என்னைவிட நன்றாக நடித்துவிடுவார்களோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும்.பல காட்சிகளில் இதையேதான் அவர் தொடர்ந்து என்னிடம் சொல்வார்.பப்புவும் நானும் இணைந்து நிறைய காமெடி காட்சிகளில் நடித்துள்ளோம்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts