மேக்ஸ் – திரைப்பட விமர்சனம்
அண்மைக்கால திரைப்படங்களில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. அந்தக் குறையைப் போக்க சுதீப் கதாநாயகனாக நடித்திருக்கும் மேக்ஸ் படம் வந்திருக்கிறது.
காவல் ஆய்வாளர் அர்ஜுன் மஹாக்ஷய் என்கிற மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப் நடித்திருக்கிறார்.அடிக்கடி பணி இடைநீக்கத்துக்கு ஆளாகக் கூடியவர்.அப்பஃபி ஒருமுறை பணி இடைநீக்கம் முடிவடையும் நாளில் தப்பு செய்யும் இரண்டு நபர்களை அடித்துத் துவைத்து காவல்நிலையத்தில் அடைத்து வைக்கிறார்.அடுத்தநாள் காலையில் அவர்களிருவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார்கள்.அவ்விருவரும் சர்வவல்லமை படைத்த ஓர் அமைச்சரின் மகன்கள்.
அப்புறமென்ன? கதாநாயகனுக்குப் பல்வேறு சிக்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம்.
அதிரடியான காவல்துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார் சுதீப்.சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கின்றது.அவருடைய நாயக பிம்பத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிற மாதிரி திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. அந்த நடிப்பிலும் நிறைவாகச் செய்திருக்கிறார். காவலர்களைக் காக்க அவர் செய்யும் வேலைகள் இரசிகர்களிடம் வரவேற்புப் பெறுகின்றன.
காவல் ஆய்வாளர் ரூபாவாக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.அவர் வில்லன்களுக்குத் துணை போகிறவர் என்றாலும் நடிப்பால் கவர்கிறார்.
காவலர் ஆரத்தியாக சம்யுக்தா ஹொர்னாட்,காவலர் மீனாவாக சுக்ருதா வாக்லே ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.தங்கள் வேடம் திரைக்கதையில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
வில்லனாக சுனில்,அமைச்சராக சரத் லோகிதாஸ்வா,இன்னொரு அமைச்சராக ஆடுகளம் நரேன் ஆகியோரோடு வம்சி கிருஷ்ணா, பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, அனிருத் பட்,உக்ரம் மஞ்சு உள்ளிடோரும் பொறுப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா உழைப்பில் காட்சிகள் பரப்ரவென நகர்கின்றன.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ்லோக்நாத்,நாயகன் சுதீப்பின் பிம்பத்தைப் பன்மடங்கு உயர்த்தும் வகையில் பின்னணி இசை கோர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் எஸ்.ஆர்.கணேஷ்பாபு,வருகிற இரசிகள் திருப்தியுடன் வெளியேறும் வண்ணம் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்கார்த்திகேயா.தெரிந்த கதைதான் என்றாலும் அதை ஓரிரவுக்குள் நடக்கிற மாதிரி கால எல்லை வகுத்ததும் அதற்கேற்ற புத்திசாலித்தனமான திரைக்கதை எழுதியிருப்பதும் அவற்றை விறுவிறுப்பாகக் கொடுத்திருப்பதும் நன்று.
பொழுது போக்கத் தகுந்த படம்.
– இளையவன்











