பிரபல நடிகர் திடீர் மரணம் – திரையுலகம் இரங்கல்
இயக்குநர், நடிகர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட கலைஞர் ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் இன்று திடீரென காலமானார். அவருக்கு வயது 61.
1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.
2009ஆம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த ‘மாசிலாமணி’ படத்தை ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான ‘வேலூர் மாவட்டம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது தவிர ‘சலீம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் ஆர்.என்.ஆர்.மனோகர் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை மறைந்துள்ளார்.
இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்ஆர். இளங்கோ வின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.











