2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் மீது வழக்கு – உண்மை என்ன? சூர்யா தரப்பு விளக்கம்
சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது.
சூரரைப் போற்று, 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யபட்டது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட பிராந்திய மொழி படமாகவும் சாதனை படைத்தது. ஐஎம்டிபி தரவரிசையில் ‘தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ மற்றும் ‘தி காட்பாதர்’ படங்களுக்கு அடுத்து 9.1 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை சூரரைப் போற்று பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமைகள் வாய்ந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், இந்தியிலும் வெளிவர இருக்கிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க, நடிப்பில் தேர்ந்த பிரபலமான நடிகர் நடிகையர் நடிக்க இருக்கிறார்கள். சூரரைப் போற்று இந்தித் திரைப்படத்தை சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2டி என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த அறிவிப்பு அண்மையில் வெளீயானதும், சூரரைப்போற்று படத்தில் இணைந்திருந்த சிக்யா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சூர்யாவின் 2டி நிறுவனம் மீது ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து 2டி எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில்…..,
கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
“கோபிநாத் அவர்களுக்குத் தந்த பணத்தைத் தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்க்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை,” என்று ராஜசேகர் கூறியுள்ளார்.
“எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளைத் தாமதப்படுத்தவும், அதிகமாகப் பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.











