செய்திக் குறிப்புகள்

என் சுவாசமே படத்தின் இசை வெளியீட்டுவிழா – தொகுப்பு

இயக்குநர் ஆர்.மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’.எஸ்விகேஏ (SVKA Movies) சார்பில் சஞ்சய் குமார்,எஸ்.அர்ஜூன் குமார்,எஸ்.ஜனனி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்,திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் இணை தயாரிப்பாளர் இரமேஷ் வெள்ளைதுரை, பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்வினில் பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் பேசியதாவது….

நான் பாடலாசிரியாகப் பணியாற்றிய 3 ஆவது திரைப்படம் இது. இசையமைப்பாளர் பிஜே அவர்களுக்கு என் நன்றிகள். பல வருடங்களாகத் திரையில் இருக்கும் அவர் இன்னும் பெரிய இடத்தை அடைய வேண்டும்.எனக்கு இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் எழுத வாய்ப்புத் தந்துள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது.இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நன்றி என்றார்.

மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி பேசியதாவது….

பாடல்கள் எல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது.இணைத் தயாரிப்பாளர்கள் சேர்ந்து இன்று இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள், அது மூலமே அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. படத்தின் புதுமுகங்கள் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். புதுமுகங்களுக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தர வேண்டும். படம் வெற்றியடைய வாழ்த்துகள் நன்றி என்றார்.

பாடலாசிரியர் ஶ்ரீவித்யா பேசியதாவது…..

தமிழ்த் திரையுலகில் இப்படம் மூலம் நான் அறிமுகமாகிறேன்.நான் கல்லூரிப் பேராசிரியர்.பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் என் நண்பர் அவர் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்திக்கான வரிகள் நான் எழுதியுள்ளேன்.தமிழில் எழுதவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது.பெண்களை அவர்களின் உடலை வெளிகாட்டுவதை,நாங்கள் விரும்புவதில்லை.ஆனால் இன்றைய உலகம் அதை விரும்புகிறது.இப்படத்திற்காக படக்குழுவினர்கள் நன்றாக உழைத்து, விஷுவல்களை உருவாக்கியுள்ளனர். இளமைத் துள்ளல் படம் முழுக்கத் தெரிகிறது.படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் பிஜே பேசியதாவது…..

எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும் அதனால் மன்னிக்கவும்.தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.நான் வயநாடு ஏரியாவைச் சேர்ந்தவன்.அங்கு ரஜினி கமல் படங்கள் தான் அதிகம் ஓடும்.இந்தப்படத்தின் வாய்ப்பு எதிர்பாராததது.எனக்கு ராஜா சார்,ஏ.ஆர்.ரஹ்மான் சார் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.அவர்களால் தான் இசையமைப்பாளர் ஆக ஆசைப்பட்டேன் தமிழக இரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் நன்றி என்றார்.

கொலப்பள்ளி லீலா பேசியதாவது……

எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும். உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.இந்தப்படத்தின் வாய்ப்பிறக்காக,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.இயக்குநரை எனக்கு நன்கு தெரியும். கடுமையான உழைப்பாளி,அவருக்கு எல்லோரும் நல்ல வாய்ப்புகள் தர வேண்டும்.அவருக்குப் பெரிய வெற்றிகள் கிடைக்க வேண்டும்.இப்படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி.எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

நடிகர் ஆதர்ஷ் பேசியதாவது….

எனக்குத் தமிழ் கொஞ்சம் மட்டுமே தெரியும். மணி பிரசாத் சார்,மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் என் நன்றிகள்.நான் புதுமுகம்.உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்.நன்றி என்றார்.

நடிகை அம்பிகா மோகன் பேசியதாவது….

என் சுவாசமே படத்தில் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சி.தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகியுள்ளேன்.மணி பிரசாத் சார்,மற்றும் தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் நன்றி.ஒரு குடும்பமாக இருந்து,அனைவரும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

நடிகர் சாப்ளின் பாலு பேசியதாவது….

ஒரு சின்ன கேரக்டர் தான் நடிக்கப் போனேன், எனக்குப் பெரிய கேரக்டர் தந்து,படம் முழுக்க வரவைத்து விட்டார் இயக்குநர்.கஷ்டப்படும் நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் வாய்ப்பு தருகிறேன் என்று தயாரிப்பாளர் சொன்னார், அவர் மனதிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

நடிகர் விஜய் விஷ்வா பேசியதாவது……

என் சுவாசமே இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் முன்னமே பார்த்தேன்.மொபைலில் பார்க்கும் போதே அவ்வளவு அழகாக இருந்தது.படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் கூப்பிட்டுப் பாராட்டியது மிக மகிழ்ச்சியாக இருந்தது.மலையாளப் பேச்சு கேட்க அவ்வளவு அழகாக இருந்தது.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.சின்னப்படங்கள் வியாபரத்தில் சினிமா சங்கங்கள் உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது…..

சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை,அன்பு இல்லை,உணர்வில்லை,சுவாசம் என்பதே உயிர் வாழ முக்கியம். வாழ்வின் முக்கியம் சுவாசம்.என் சுவாசமே என அதை டைட்டிலாக வைத்ததற்கு வாழ்த்துகள்.கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும்.மலையாளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.இந்திய அளவில் மலையாளக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.அவர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள்.கதையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள்.அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.கலைக்கு மொழி கிடையாது.இப்படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.படம் வெற்றிபெற என் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது….

கொலப்பள்ளி லீலா அம்மா அவர்களுக்கு என் முதல் வணக்கம்.நீங்கள் இங்கு வந்தது நிறைவு.என் சுவாசமே டைட்டில் மட்டும் தமிழில் இருக்கிறது மற்றதெல்லாம் மலையாளம் தான்.இங்கு யாரும் மொழியைப் பெரிதாகப் பார்ப்பதில்லை.எல்லோரையும் கொண்டாடுவார்கள்.மலையாளத்தில் இருந்து கன்னடத்திலிருந்து,இந்தியிலிருந்து எல்லாம் படங்கள் இங்கு ரீமேக் ஆகும்.இங்கு நாங்கள் அனைவரையும் கொண்டாடுவோம்.என் சுவாசமே படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.மணி பிரசாத் கூறியதாவது….

இங்கு எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகள்.மலையாளப்படங்களை இங்கு கொண்டாடுவது போல தமிழ்ப்படங்களைக் கேரளத்தில் கொண்டாடுவார்கள்.கேரளாவில் தமிழ்ப்படங்களுக்கு பெரிய பிஸினஸ் இருக்கிறது.இந்தப்படத்தில் எனக்குக் குறைவான நேரமே இருந்தது.அதனால் தான் மலையாளக் கலைஞர்கள் நிறையப் பணியாற்றியுள்ளனர். எனக்காக எல்லோரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர்.படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி என்றார்.

தயாரிப்பாளர் கே.இராஜன் பேசியதாவது…..

என் சுவாசமே.. மலையாளத்திலிருந்து படமெடுக்கிறவர்கள் நல்ல தமிழ் டைட்டில் வைக்கிறார்கள் ஆனால் தமிழில் ஆங்கில டைட்டில் வைக்கிறார்கள்.எங்கு போனது தமிழ்ப்பற்று.இந்தப்படத்தில் 3 பாடல்கள் போட்டுக்காட்டினார்கள்.அத்தனை அற்புதமாக இருந்தது.இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பது இன்னும் பலம். மலையாள சினிமாவில் எப்பவும் கதைக்காகத் தான் ஹீரோ.ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள் அநாவசிய செலவு செய்ய மாட்டார்கள், இங்கு ஏவிஎம்மில் ஷூட்டிங் வைத்தாலும் கேரவன் கேட்கிறார்கள்.மம்முட்டி தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதே இல்லை.அவரே சொந்தமாக கேரவன் வைத்துக்கொண்டுள்ளார். இதையெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.தமிழ் சினிமாவிற்கு கடுமையான சென்சார் கெடுபிடிகள் இருக்கிறது ஆனால் வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லை.அதில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கிறது.மத்திய அரசு வெப் சீரிஸிற்கும் சென்சார் கொண்டு வர வேண்டும்.என் சுவாசமே படத்தை சிறப்பான படமாக கொண்டு வந்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…..

மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறார்கள்.தமிழகம் எப்போதும் எல்லோரையும் வாழவைக்கும். படத்தின் பாடல்கள் விஷுவல்கள் எல்லாம் மிக நன்றாக வந்திருக்கிறது.படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் என்றார்.

இணை தயாரிப்பாளர் ஶ்ரீதர் கோவிந்தராஜ் பேசியதாவது…..

இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துகள். சஞ்சய் அண்ணா எனக்கும் இயக்குநராக வாய்ப்புத் தந்துள்ளார்.அந்தப்படத்திற்கு அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.என்னை இணைத் தயாரிப்பாளராகவும் ஆக்கி, அழகு பார்க்கும் சஞ்சய் அண்ணாவிற்கு நன்றி.இயக்குநர் மணி பிரசாத் பற்றி நிறையச் சொல்ல வேண்டும். ஷூட்டிங்கின் போது அவரது தம்பி இறந்து விட்டார்,ஆனாலும் அவர் மறு நாள் ஷூட்டிங் வந்தார்.சினிமா மீது அவ்வளவு அர்ப்பணிப்பு கொண்டவர்.இந்தப்படத்திற்காக மொத்தக் குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர்.எங்கள் நிறுவனம் சார்பில் தரமான படங்களைத் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts