என் மீது புகார் வந்தது எப்படி? – யோகிபாபு விளக்கம்

வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில்,இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில்,மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”.
இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, மே 8 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜாகிர் அலி பேசியதாவது…
நான் ஒரு மலையாளி,தமிழ் மீதான நம்பிக்கையில், யோகிபாபு மீதான அன்பில்,இப்படத்தை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். யோகிபாபு இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் பேசியதாவது……
இயக்குநரை 10 வருடம் முன்பிருந்தே தெரியும். அவர் இயக்கிய தீப்பிடிக்கும் பச்சை மரம் படத்திற்கு என் மனைவி தான் எடிட்டர், இப்போது பத்து வருடங்கள் கழித்து, இப்படத்திற்கு நான் எடிட்டர் மகிழ்ச்சி. என்னிடம் கதை சொல்லும் பல இயக்குநர்கள், யோகிபாபு தான் ஹீரோ என்பார்கள். யோகிபாபு எல்லோரும் அணுகக்கூடிய நாயகனாக இருக்கிறார். அவர் அதிக படம் செய்யும் போது, சினிமா நன்றாக இருக்கும்.இந்தப்படத்திற்கு மது அம்பாட் கேமராமேன், பல தேசிய விருதுகள் வென்றவர்,அவர் படத்தில் நான் இருப்பது எனக்குப் பெருமை.இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.
நடன இயக்குநர், நடிகை வசந்தி பேசியதாவது..,
ஜோரா கைய தட்டுங்க படத்திற்கு என்னை அழைத்த விநீஷ்க்கு நன்றி. யோகிபாபு நிறைய ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளில் உண்மையிலேயே அவரை அடித்துள்ளேன்,பரவாயில்லை தயங்காமல் நடியுங்கள் என எனக்கு ஊக்கம் தந்தார். அவர் நிறைய உதவும் குணம் கொண்டவர்.இப்படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.
நடிகர் ஶ்ரீதர்கோவிந்தராஜ் பேசியதாவது……
இயக்குநர் விநீஷ் சார்,என்னை நம்பி மிகப்பெரிய கதாப்பாத்திரம் தந்துள்ளார்.அவர் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளேன் என நம்புகிறேன்.யோகிபாபு அண்ணாவிடம் ஒரு சாரி கேட்டுக்கொள்கிறேன். படத்தில் அவர் மீது பாட்டிலால் அடிக்கும் காட்சியில் உண்மையிலேயே அடித்து விட்டேன் ஆனால் அவர், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், கவலைப்படாதே இயக்குநருக்கு ஒகே இல்லை என்றால், ஒன்மோர் போகலாம் என்றார். என்னை ஊக்கப்படுத்தினார் அவருக்கு என் நன்றி. மது அம்பாட் சார் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்குப் பெருமை. எல்லோருக்கும் மிக்க நன்றி. மே 16 ஆம் தேதி படம் வருகிறது. ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
நடிகர் அருவி பாலா பேசியதாவது…..
இந்தப்படம் செய்யும் போது தான் வேட்டையன் பட வாய்ப்பு கிடைத்தது.மது அம்பாட் சார் மூலம் தான் இந்த பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அவருக்கு நன்றி. வாய்ப்பு தந்த இயக்குநர் விநீஷ் அண்ணாவிற்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. யோகிபாபு அண்ணன் நிஜத்திலும் அண்ணனாகவே நடந்து கொண்டார். அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன்,என்னை கைட் பண்ணிக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி. என்றார்.
ஒளிப்பதிவாளர் மது அம்பாட் பேசியதாவது…
இந்தப்படத்திற்காக விநீஷ் என்னை அழைத்தது மகிழ்ச்சி. யோகிபாபு மிக நல்ல நடிகர். சிறப்பாக நடித்துள்ளார். எல்லோரும் மிக சந்தோசத்துடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி என்றார்
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
தயாரிப்பாளர் ஜாகிர் அலிக்கு வாழ்த்துகள்.மது அம்பாட் இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்,அவர் இப்படத்தில் வேலை பார்த்துள்ளது பெருமை.அவர் எப்போதும் தேர்ந்தெடுத்துத் தான் படம் செய்வார்.இது இப்படத்திற்குப் பெருமை. எல்லோரும் மிகவும் தன்னடக்கமாக இருக்கிறார்கள்.யோகிபாபு பல சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார்.இது சினிமாவுக்கு நல்லது.எனக்கு இன்னும் படம் காமிக்கவில்லை, டிரெய்லர் நன்றாக உள்ளது. படமும் நன்றாக இருக்குமென நம்புகிறேன்.அனைவருக்கும் வாழ்த்துகள்.யோகிபாபுவை கலகலப்பு படத்திலிருந்து பார்க்கிறேன்,அவரது இந்த உயரத்திற்கு கடின உழைப்பு தான் காரணம்.யோகிபாபு புரமோசன் வருவதற்கு 7 இலட்சம் கேட்கிறார் என புகார் கூறுகிறார்கள்,ஆனால் அவர் அப்படியில்லை என எனக்குத் தெரியும். அவர் 1 நாள் நடித்த படத்திற்குக் கூப்பிடுவது எல்லாம் அழகல்ல. அவர் பல படங்களுக்கு புரமோசனுக்கு வருகிறார். அவரைப் பற்றி தப்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
இயக்குநர் விநீஷ் மில்லினியம் பேசியதாவது…
நான் கொஞ்சம் மலையாளி,மலையாளத்தின் தாய்மொழி தமிழ் தான்.2013 இல் புதுமுகங்களின் முயற்சியில் தீக்குளிக்கும் பச்சை மரம் படம் எடுத்தேன் பலருக்குத் தெரிந்திருக்கும்.அப்போது என்னிடம் 400 பேர் நடிக்கக் கேட்டு வந்தார்கள், அப்போது ஒருவர் என்னிடம் வந்திருந்தார், அவருக்கு ஒரு நாள் 1000 ரூபாய் சம்பளம் பேசி 25 நாள் நடிக்கச் சொன்னேன், ஆனால் நான் நிறையப் படம் நடித்துள்ளேன், எனக்கு 2000 சம்பளம் தாருங்கள் என்றார், ஆனால் நான் நடிக்க விருப்பமிருந்தால் நடி இல்லையென்றால் ஓடிவிடு என்றேன்.அவர் தான் யோகிபாபு. ஆனால் சில வருடம் கழித்து நான் போன் செய்த போது, அன்போடு என்னை அழைத்துப் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் படம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, கதையெல்லாம் சொல்ல வேண்டாம், உங்களுக்காக நடிக்கிறேன் எனச் சொன்னார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக அவரது நடிப்பில் மிக வித்தியாசமான படமாக இருக்கும்.மது அம்பாட் சார் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவார், இப்போது சொன்னாலும் மலை ஏறுவார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் என் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எனக்குத் தமிழில் முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் தாணு சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. என்றார்.
கலைப்புலி தாணு பேசியதாவது……
இப்படத்தின் டிரெய்லர் பாடல்களை முன்பே பார்த்து விட்டேன்.நண்பர் தயாரிப்பாளர் ஜாகிர் அலியை வரவேற்கிறேன்.யோகிபாபு எல்லோருக்கும் நல்லவராகத் தான் இருக்கிறார்.நான் போன் செய்தபோது, ஒரு தயாரிப்பாளருக்குப் பணமே வாங்காமல் நடித்துத் தந்தார். அவரது பெயருக்குக் களங்கம் வரக்கூடாது. இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என்றார்.
நடிகர் யோகிபாபு பேசியதாவது…,
தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார்,என்னால் இல்லை,அதற்கு வேறு பல காரணங்கள்,ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன்,அந்தப்படத்திற்குத் தான் 7 இலட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள்.இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும்,வந்துள்ளேன்.நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை,ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை.எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.