மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்டவர் சூர்யா – இயக்குநர் விஜயகுமார் புகழாரம்
நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் குறுமுன்னோட்ட வெளியீட்டு விழா மார்ச் 23 அன்று சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குநர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் படத்தின் இயக்குநர் விஜய்குமார் பேசுகையில்…..
நடிகர் சூர்யா ஏன் உறியடி 2 வை தயாரிக்க வேண்டும் என்று நிறையப் பேர் கேட்கிறார்கள், கேட்க நினைக்கிறார்கள், நடிகர் சூர்யா மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன். அவரது நம்பிக்கையை உறியடி 2 படம் காப்பாற்றும்.
இந்தப் படம் மக்களுக்கான படம் என்ற நம்பிக்கையையும் காப்பாற்றும்.தமிழ்த் திரையுலகிலுள்ள ஒவ்வொரு இயக்குநருக்கும், ஒவ்வொரு நடிகருக்கும் இந்த நிறுவனத்தில் படம் பண்ண வேண்டும் என்ற கனவு இருக்கிறது.
ஏவிஎம் நிறுவனத்தைப் போல் ஒரு படத்தைத் தொடங்கியது முதல் அதனை திரைக்குக் கொண்டுவந்து கொண்டு வருவது வரை மிகச் சரியான திட்டமிடல் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.
படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியைக் கூறி படைப்பை எனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை.
தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒரு கலவரக் காட்சியைப் படமாக்கினோம். அப்போது உதவி இயக்குநர்களை போலீசாக நடித்தவர்களிடம் உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம்.
அதேபோல் உதவி இயக்குநர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, காட்சியின் போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்று ஒரு சைகையை சொல்லியிருந்தோம். ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கூட்டத்தில் உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியை வாங்கிக் கொண்டு இந்தக் காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள். அதற்காக யாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம் என்பேன்.
அத்துடன் இந்தப் படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக உறியடி-2 இருக்கும் என்றார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில்,….
நான் நடிக்கும் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போனாலும், இதுபோன்று சந்தர்ப்பங்களில் உங்களை எல்லாம் சந்திப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைச் சந்தித்தேன். அவருடைய இசையையும் வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவர் இவ்வளவு தெளிவாகப் பேசியது எம்மை ஈர்த்தது. அவர் படத்தைப் பற்றி கூறிய வார்த்தை, ‘இந்தப் படம் உங்களை எண்டர்டெயின் பண்ணாது. ஆனால் டிஸ்டர்ப் பண்ணும். என்று சொன்ன வார்த்தைகள் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.
இங்கு வந்தவுடன் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் என்னிடம் ‘நீங்கள் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் சார் ’ என்று சொன்னபோது, என்னுள் நாம் சீனியராகி விடுகிறோமோ..! என்ற எண்ணம் எழுந்தது.
இதுவரை திரையில் நான் என்ன செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கற்பனையில் உருவானது. எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் அளித்தது.
இந்நிலையில் அவர்களுடைய வேலையில் சென்று குறுக்கீடு செய்யவும், ஆலோசனை செய்யவும், என்னை நான் தகுதிப் படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும் நினைக்கிறேன்.
ஆனால் நல்ல விஷயங்களை ரசிக்கப் பிடிக்கும். நல்ல விசயங்களுக்குத் துணையாக உடன் நிற்கப் பிடிக்கும்.எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளைச் செய்ய முடியுமோ, அதைத்தான் இந்தப் படத்திற்குச் செய்திருக்கிறேன். இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் முதன் முதலாக அவர் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார் அதுவும் எங்களுக்கு சந்தோஷமே.
2டி நிறுவனம் 10 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு தான்.
இயக்குநர் விஜய்குமார், என்னைப் போலவே அவரும் ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததை டக்கென்று வெளிப்படுத்த மாட்டார். விவாதிக்க மாட்டார். அனைத்தையும் புரிந்து கொள்வார்.
ஒரு அறிமுகத்திற்குப் பிறகு இயக்குநர் விஜய்குமாரின் உறியடியை பார்த்தேன். அதன் பின்னர் அவருடைய முதல் சந்திப்பிலேயே நான் எப்படி ராஜா சாருடன் பழகுகிறேனோ அதேபோல் இயக்குநர் விஜய்குமாரிடமும் பழகினேன்.
ஒருவர் சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா…? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என்னுள் ஏற்படுத்தினார். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனுள் எவ்வளவு தூரம் உண்மையாகப் பயணிக்க முடியும் என்பதையறிந்து, அந்தளவிற்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜயகுமார்.
அவர் சினிமாவிற்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, குழந்தைகளை விட்டுப் பிரிந்து, அவ்வளவு நேர்மையாக இருக்கும் ஒருவரை நான் விஜய்குமாரிடம் பார்த்தேன்.
எங்க அப்பா படப்பிடிப்புத் தளத்திற்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குநரை சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும் நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கிருக்கிறது.
ஆனால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உறியடி என்ற படத்தை எடுத்த விஜய்குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். திரையில் ஒரு ஒரு உண்மை வெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம்.
உறியடி 2 ஏன் வரவில்லை? என்ற வினா எழுந்தது. உறியடி வந்து நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு, 2டி நிறுவனத்தின் மூலமாக உருவானதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் எண்டர்டெயின் பண்ணாது. டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு சூர்யா பேசினார்.











