நிகழ்ச்சியை பிரபலப்படுத்த பிக்பாஸ் குழு செய்யும் வேலை – அம்பலப்படுத்திய சினேகன்
கவிஞர் சினேகன் பிக்பாஸ் முதல் பாகத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது எல்லோருடனும் இனிமையாகப் பேசிப் பழகினார் சினேகன். எல்லா போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டார். வையாபுரி, ஜூலி, ஓவியா, காயத்ரி, ஆரவ் என எல்லோருடனும் சகஜமாகப் பழகினார். மனம்விட்டுப் பேசினார்.
கிட்டத்தட்ட எல்லோரும் வெளியேறிய நிலையில், ஆரவ்வும் சினேகனும் மட்டுமே இறுதிச்சுற்றில் நின்றனர். பலத்த போட்டிக்கு மத்தியில், ஆரவ் வெற்றிபெற்றார்.
தற்போது, பிக்பாஸ் 2ல் ஆசிரியராக வந்து சென்று, சிறியதொரு பாடத்தை நடத்தினார் சினேகன். முன்னதாக, பொங்கல் மாதிரியான விழாவை பிக்பாஸ் டீமைக் கூட்டிக்கொண்டு, சினேகன் ஊருக்குச் சென்று, சினேகன் வீட்டுக்குச் சென்று, சினேகன் குடும்பத்தாரைக் கொண்டு மிகப்பெரிய நிகழ்ச்சியே நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நேற்று பேய் எல்லாம் பாவம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கவிஞர் சினேகன் பேசியதாவது:
என்னை பிக்பாஸ் சினேகன் என்று சொன்னார்கள். நான் சினிமாவுக்கு வந்து, 2,500 பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடல்கள் தராத பேரையும் புகழையும் பிக்பாஸ் எனக்குத் தந்தது. நூறுநாள் வைச்சு செஞ்சாங்கன்னுதான் சொல்லணும். அங்கே நாங்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டோம் என்பதையெல்லாம் முழுவதுமாக ஒளிபரப்பவில்லை. அப்படி ஒளிபரப்பவும் முடியாது. நிகழ்ச்சிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்துக்கொண்டு ஒளிபரப்பினார்கள். டிஆர்பி ரேட்டிங், வியாபார விஷயங்கள் என பார்க்கத்தானே செய்வார்கள் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தார்.
அதன்பின் பேசிய இயக்குநர் பேரரசு, நீங்கள்தான் உண்மையான பிக்பாஸ் என நினைக்கிறேன், நீங்கள் இல்லாமல் அந்த வீடு நன்றாக இல்லை. எனவே நீங்கள் மீண்டும் அங்கே செல்லுங்கள் என்றார். அதற்கு, மீண்டும் என்னை கூப்பிட்டார்கள் போகவில்லை, போகப்போவதுமில்லை என்றார் சினேகன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை முழுமையாக ஒளிபரப்பாமல் எடிட் செய்து நிகழ்ச்சியைப் பிரபலமாக்கத் தேவையானவற்றை மட்டுமே ஒளிபரப்புகிறாரகள் என்பதையும் அதனால் சினேகன் மனதளவில் காயம் பட்டிருக்கிறார் என்பதும் அவர் பேச்சில் வெளிப்பட்டது.












