செய்திக் குறிப்புகள்

புதிய படக்குழுவுக்கு சிம்பு செய்த உதவி

இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் தொட்ரா. பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தைத் தாங்கிக் கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர்.

இவர்களுடன் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர்.

உத்தமராசா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.. வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தில் ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்படம் வரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அப்படம் பற்றிப் படக்குழுவினர் கூறியதாவது….

இந்தப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியபோது, நாயகி வீணா அந்தக் காட்சியின் சீரியஸ்னெஸ் புரியாமல் அதிக டேக் வாங்கினார்.இதனால் கோபமான இயக்குநர் மதுராஜ் நாயகியின் கன்னத்தில் பளார் என அறைவிட அந்த அதிர்ச்சியுடன், குறிப்பிட்ட அந்தக் காட்சியில் இயல்பாக நடித்து முடித்தார் வீணா.

ஆனால் இதேபோல இன்னும் சில சீரியஸான காட்சிகளை படமாக்கும்போது அந்த சீரியஸ் மூடுக்கு வீணாவால் உடனடியாக மாறமுடியவில்லையாம். அதற்காகவே இயக்குநர் மதுராஜிடம் அடிக்கடி சென்று “ப்ளீஸ்.. மீண்டும் என்னை கன்னத்தில் அறையுங்கள்” என கேட்டாராம். “இது என்னடா வம்பாப் போச்சு.. ஒருதடவை அறைஞ்சது குத்தமாய்யா” என ஜெர்க் ஆன மதுராஜ் ‘யம்மா ஆள விடு சாமி” என கெஞ்சாத குறையாக நழுவ, ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பானதாம்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா, டெக்ஸ்டைல் பிசினஸ் நடத்தி வருபவர். தனது காதல் கணவர் எம்.எஸ்.குமார் மனதில் கனன்று கொண்டிருந்த நடிப்பு ஆசையை நிறைவேற்ற சினிமா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார். துணி பிசினஸில் உடனுக்குடன் இலாபம் பார்த்துவந்த இவருக்கு, சினிமாவில் கேட்கக் கேட்க பணத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒன்வே விஷயம் அவ்வப்போது டென்ஷனை ஏற்றிவிடுமாம்.

உடனே கோபமாக கத்த ஆரம்பிக்கும் அவரை, அவரது கணவர் எம்.எஸ்.குமார் கூல் பண்ணும் டெக்னிக்கே அலாதியானது. அவர் கோபமாகும் சமயத்தில் அவருக்கு பிடித்த சாமி பாடலைப் பாட ஆரம்பித்தால், உடனே கோபம் தணிந்து படப்பிடிப்புக்குத் தேவையான பணத்தை கொடுத்து விடுவாராம்.

ஆனால் இந்த கோபமெல்லாம் முழுப்படத்தையும் தயாரிப்பாளர் சந்திரா பார்க்கும் வரையில் தான். கணவர் ஊரில் இருக்கும்போது இங்கே படத்தைப் பார்த்த சந்திரா, அதில் தனது கணவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு தனது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் அனுப்பினாராம். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? தனது காதல் கணவரிடம் இந்த பனிரெண்டு வருடத்தில் ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லியிராத இவரை, கணவரின் நடிப்பு ‘லவ் யூ’ சொல்லும் அளவுக்கு பிரமிக்க வைத்துவிட்டதாம்.

இதில் என்ன பியூட்டி என்றால் கணவரின் ஆசையை நிறைவேற்ற படம் தயாரித்தாலும் கூட, கணவரை ஹீரோவாகத்தான் நடிக்கவைப்பேன் என அவரும் பிடிவாதம் காட்டவில்லை. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அவரும் அடம் பிடிக்கவில்லை. சினிமாவுக்குள் சொந்தப்பணத்தை வைத்துக்கொண்டு ஹீரோவாக நடிக்க வருபவர்கள் கவனிக்க வேண்டிய பாடம் இது.

இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள உத்தமராசா இதில் தான் அறிமுகம் ஆகியுள்ளார். அடிப்படையில் டிராக் பாடகரான இவர் ஒரு பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராகப் பணியாற்றினாராம். பொதுவாக இசையில் தன்னுடைய குரு யாரென்று சொல்ல சிஷ்யர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் உத்தமராசா தனது குருவின் பெயரைச் சொல்லவே விரும்பவில்லை. அந்தளவுக்கு, தனது சிஷ்யர்கள் நன்றாக முன்னேறுவதைக் காணச் சகிக்காத ஆசாமியாம் அந்த இசையமைப்பாளர். யார் அவரோ..? உத்தமராசாவுக்கே வெளிச்சம்.

இந்தப்படம் ஆணவக்கொலை பற்றி உருவாகியுள்ளதாக ஏற்கனவே இயக்குநர் மதுராஜ் பல இடங்களில் சொல்லிவிட்டார்.

அதேசமயம் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு ‘யு’ சான்றிதழும் கொடுத்துவிட்டது. ஆனால் அடுத்தவாரம் படம் ரிலீசாக இருக்கும் இந்த நேரத்தில் இந்தப்படத்தின் கதை எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்திருக்கிறீர்கள் எனத்தெரிகிறது. எங்களுக்குப் படத்தைப் போட்டுக்காட்டியே தீரவேண்டும். இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என பஸ் பிடித்து சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு உட்கார்ந்துகொண்டு இயக்குநர் மதுராஜை மிரட்டி வருகிறார்களாம் சில ஜாதி அமைப்பு ஆட்கள்.

இது என்னடா புது சிக்கல், இவர்களை எப்படி சமாளிக்கப்போகிறோம் என செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணிவைத்துவிட்டு திகிலடித்து கிடக்கிறார் இயக்குனர் மதுராஜ்.

ஒரு சண்டைக்காட்சியில் நாயகன் பிருத்வியின் முகத்தை தனது காலால் நடிகர் எம்.எஸ்.குமார் அழுத்தி மிதிக்க வேண்டும்.. பிருத்வி எவ்வளவு பெரிய நடிகரின் மகன்.. அவரைப்போய் நான் மிதிப்பதா என எம்.எஸ்.குமார் தயங்க, அட பரவாயில்ல பாஸ்.. சும்மா மிதிங்க என அவரை உற்சாகப்படுத்தி அந்தக் காட்சி இயல்பாக வரும் வரை முகம் சுளிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தாராம் பிருத்வி. இந்தப்படம் பிருத்விக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் இயக்குநர் மதுராஜ்.

மலையாள தேசத்தை சேர்ந்த நாயகி வீணா, ஷூட்டிங் வந்த முதல்நாள் தனது அம்மாவுடன் வந்தாராம்.. ஆனால் தயாரிப்பாளர் ஜெய் சந்திரா காட்டிய அக்கறையையும் பரிவையும் பார்த்து நெகிழந்துபோய் தனது அம்மாவை ஊருக்கு பேக்கப் செய்து அனுப்பிவிட்டாராம். அதன்பின் படப்பிடிப்பு நடைபெற நாட்கள் முழுதும் தயாரிப்பாளர் ஜெய் சந்திராவுடன் தான் தங்கியிருந்தாராம் வீணா. தன் வீட்டுப்பெண் போல் பார்த்துக்கொண்டாராம் ஜெய் சந்திரா.

இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரொம்பவே யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில் தான்.

அதுமட்டுமல்ல புது இசையமைப்பாளர், புது டீம் என்கிற பாகுபாடு பார்க்காமல், கேட்டதும் ஒப்புக்கொண்டு நடிகர் சிம்பு இந்தப்படத்திற்காக ‘பக்கு பக்கு’ என்கிற பாடலைப் பாடியுள்ளார். அந்தப்பாடல் யூ டியூப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் சிம்புவுக்குப் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்,

Related Posts