September 18, 2026
செய்திக் குறிப்புகள்

ராகவா லாரன்ஸின் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதியபட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதில்….

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன்.

இவற்றில், ‘ஆடுகளம்’ படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

இதேபோல், இயக்குநர் வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘உதயம்’, ‘காக்காமுட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.’காக்கா முட்டை’ தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. ‘விசாரணை’ தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.

இப்போது இந்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள்.

பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் பான்-இந்தியா ஸ்டார் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை, வெற்றிமாறன் உதவியாளர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார்.

எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இவர் முதல்முறையாக இப்படம் மூலம் ராகவா லாரன்ஸ் உடன் இணைகிறார்.

இதன் படபிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும்.

சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களை கொடுத்துவரும் ராகவா லாரன்ஸ், எஸ்.கதிரேசன், வெற்றிமாறன்,ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஆகிய இந்த நால்வர் கூட்டணியால் இந்த பிரமாண்டமான படம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts