பாரதிராஜா தேனாண்டாள் முரளி அதிரடி முடிவு – வலிமை ரிலீஸில் சிக்கல்
தமிழ்த்திரையுலகில் க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் விபிஎஃப் எனப்படும் ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை உள்ளது.
இக்கட்டணத்தை நாங்கள் செலுத்தமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டுவருகிறது.
திரையரங்குக்காரர்களோ, நீங்கள் பணம் கட்டி வெளியிட்டால் நாங்கள் திரையிடுகிறோம் இல்லையென்றால் சும்மா இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
முடிவில்லாமல் தொடரும் இந்தச் சர்ச்சையின் அடுத்த கட்டமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களும் இணைந்து ஒரு முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதன்படி, விபிஎஃப் கட்டணம் கட்டமாட்டோம் என்கிற கோரிக்கையை முன்வைத்து 2022 சனவரி 1 முதல் புதிய திரைப்படங்களைத் திரையிடமாட்டோம் என்கிற முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேசமயம், சனவரி 7 ஆம் தேதி ஆர் ஆர் ஆர் படமும் சனவரி 13 ஆம் தேதி வலிமை ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் இப்படி ஒரு வேலை நிறுத்தத்தை அறிவித்தால் சரியாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறதாம்.
இம்மாதிரியான நேரத்தில் பிரச்சினையைக் கிளப்பினால்தான் நல்ல தீர்வு கிடைக்கும் என்று பலர் சொல்கிறார்களாம்.
இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
வேலைநிறுத்தம் என்று இரண்டு சங்கங்களும் முடிவு செய்தால் ஆர் ஆர் ஆர். வலிமை ஆகிய படங்கள் உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாகும் என்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பார்ப்போம்.











